பல்லேகேலே: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெற்று இருக்கிறார். அவருக்கு அடுத்து பேட்டிங் திறன் கொண்ட சுழற் பந்துவீச்சாளராக அக்சர் பட்டேல் இந்திய அணி டி20 அணியில் தனது இடத்தை நிலை நாட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேன் தன்னை சுழற் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக முன்னிறுத்திக் கொண்டு இருக்கிறார்.
அந்த இளம் வீரர் ரியான் பராக். இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பேட்டிங்கின் போது அவர் 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும், அடுத்து பந்துவீச்சில் இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் 17 வது ஓவரை வீசினார் ரியான் பராக். அதுவே இந்த போட்டியில் ரியான் வீசிய முதல் ஓவர்.

அந்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் அவுட் ஆன நிலையில் நான்காவது பந்தில் ரியான் பராக், கனிந்து மென்டிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அது போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இலங்கை அணியை ஆல் அவுட் செய்தார். அவர் 1.2 ஓவர்கள் பந்து வீசி 5 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இதை அடுத்து ரியான் பராக் தான் அடுத்த ரவீந்திர ஜடேஜா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதன் பின்னணியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருப்பதாக பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். திடீரென 17 வது ஓவரில் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளரை அறிமுகப்படுத்தும் யோசனையை அவர்தான் கேப்டன் சூர்யகுமாருக்கு கூறி இருப்பார் என விமர்சகர்கள் கூறினர். 23 வயதே ஆகும் ரியான் பராக் இந்திய அணியின் அடுத்த ஸ்பின் ஆல் ரவுண்டராக இருப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.