மும்பை: இந்திய ஒரு நாள் அணி மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தால் வசமாக சிக்கி இருக்கிறார். அந்த புகைப்படத்தில் தனது உடல் பருமனை மறைக்கும் வகையில் ரோஹித் சர்மா போட்டோஷாப் செய்து இருந்ததை, பிசிசிஐ வெளியிட்ட புகைப்படத்தோடு ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
ரோஹித் சர்மா தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்க வேண்டி இலங்கை சென்றுள்ளார். அங்கு அவர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது தான் பேட்டிங் பயிற்சி செய்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் ரோஹித் சர்மா. அடுத்த சில மணி நேரங்களில் அதே புகைப்படத்தை பிசிசிஐ தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டது.

இரண்டு புகைப்படங்களும் ஒன்றுதான். ஆனால், ரோஹித் சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் அவரது வலது கை சற்று மெலிந்திருப்பது போலவும், வேறு சில வித்தியாசமும் இருந்தது. ஆனால், பிசிசிஐ வெளியிட்ட புகைப்படத்தில் அது இயல்பாக இருந்தது. இதை அடுத்து இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தவர்கள், அதில் ரோஹித் சர்மாவின் உடல் பருமனை குறைத்துக் காட்ட வேண்டி போட்டோஷாப் செய்திருப்பதை கண்டுபிடித்தனர்.
பிசிசிஐ வெளியிட்டிருந்த புகைப்படத்தில் ரோஹித் சர்மாவின் வயிற்று பகுதி சற்று மேடாக இருந்தது. ரோஹித் சர்மா வெளியிட்டிருந்த புகைப்படத்தில் அவரது வயிற்றுப் பகுதி சமமாக இருந்தது. இந்த இரண்டு புகைப்படத்தையும் ஒப்பிட்டு ரோஹித் சர்மா, தான் பருமனாக இல்லை என்பதை காட்டுவதற்காக போட்டோஷாப் செய்துள்ளார் என கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.
மேலும், பொறுப்பான பதவியில், இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ரோஹித் சர்மா, உடற் தகுதியை கட்டுக்கோப்பாக வைத்திருக்காமல், புகைப்படத்தில் மட்டும் தான் கட்டு கோப்பாக இருப்பது போல காட்டிக் கொள்வது மோசமான செயல் என அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். சமூக வலைத்தளங்களில் இந்த ஒப்பீடுகள் மற்றும் கேலி கிண்டல்கள் வெளியான அடுத்த சில நிமிடங்களில் ரோஹித் சர்மா அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டார்.