மும்பை: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி நிர்வாகம் ரூ.115 கோடி கொடுத்து வாங்கியது. அதுமட்டுமல்லாமல் ஏலத்திற்கு 5 நாட்களுக்கு முன்பாக மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார்.

இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருக்கும் போது, மும்பை அணியின் பதவியில் இருந்து அம்பானி குடும்பத்தினர் நீக்கியது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அம்பானி குடும்பத்தின் முடிவிற்கு பின், இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நிச்சயம் ஹர்திக் பாண்டியா வருவார். அதற்கு முன் மும்பை அணிக்கு அவர் தலைமை தாங்க வேண்டும் என்று முனைப்பு இருந்தது.
அதற்கேற்றபடி டி20 உலகக்கோப்பை தொடரில் கூட இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் நியமனம் செய்யப்பட்டார். இதன்பின் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டார். கம்பீர் இந்திய அணி நிர்வாகத்திற்குள் வந்தபின் மொத்த காட்சிகளும் மாறியது. அம்பானி குடும்பத்தினர் போட்டு வைத்த கணக்குகள் தவிடுபொடியானது.
இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்படும் வீரர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அனைத்து போட்டிகளும் ஆடக் கூடியவராக இருக்க வேண்டும் என்று கம்பீர் கேட்டுக் கொண்டார். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு பிரச்சனை ஏற்பட்டது. ஏனென்றால் ஒரு ஆண்டில் 7 மாதங்களுக்கு மேலாக ஹர்திக் பாண்டியா காயமடைந்து ஓய்வில் இருப்பவர்.
உலகக்கோப்பை தொடரில் காயமடைந்த பின், அவர் மீண்டும் டி20 உலகக்கோப்பை தொடரில் தான் இந்திய அணிக்கு விளையாடினார். இதனால் மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே சில தொடர்களில் கேப்டனாக செயல்பட்டது தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கம்பீருடன் அவர் கேகேஆர் அணியில் இணைந்து விளையாடி இருக்கிறார்.
அதேபோல் ரோகித் சர்மாவும் சூர்யகுமார் யாதவிற்கு ஆதரவளிக்க, இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலமாக தன்னை கேப்டன்சியில் இருந்து தூக்கிய மும்பை அணி நிர்வாகத்திற்கும், அம்பானி குடும்பத்திற்கும் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளதாக அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.