மும்பை : இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு உஷாராக பதில் சொல்லி தப்பித்து இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஆறு போட்டிகளில் ஆடி ஆறிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், செய்தியாளர் ஒருவர் இந்த வெற்றிக்கு உங்கள் கேப்டன்சி தான் காரணம் என சொல்லப்படுகிறதே? என கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு எப்படி பதில் அளித்தாலும் அது நாளை சிக்கலில் கொண்டு போய் விடும் என்பதை உணர்ந்த ரோஹித் உஷாராக எல்லோரையும் அசர வைக்கும் பதில் ஒன்றை கூறினார்.
இந்த செய்தியாளருக்கு முன்னதாக முன்னாள் வீரர்கள் பலரும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி தான் இந்த வெற்றி நடைக்கு முக்கிய காரணம் என அவரை பாராட்டி வருகின்றனர்.

இந்தியா உலகக்கோப்பை தொடருக்கு முன் சரியான 11 வீரர்கள் கொண்ட அணியை அடையாளம் காணாமல் இருந்தது. ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா சில அதிரடியான முடிவுகளை எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் பல ஆண்டுகளாக ஆடாத அஸ்வினை அணியில் சேர்த்தார். ஆல் - ரவுண்டர் என்ற ஒரே காரணத்திற்காக ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டார்.
உலகக்கோப்பை தொடங்கிய பின் ரோஹித் சர்மா எடுத்த முடிவுகள் எல்லாமே சரியாக அமைந்தன. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக்கோப்பை பயணத்தை தொடங்கியது இந்தியா. தொடர்ந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை ஆதிக்கம் செலுத்தி இந்தியா வீழ்த்தி இருக்கிறது.
இந்த நிலையில் தான் அந்த செய்தியாளர் ரோஹித் சர்மாவிடம் "உங்கள் கேப்டன்சி தான் இந்த வெற்றிகளுக்கு காரணம் என கூறப்படுகிறதே?" என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா, "இன்னும் இரண்டு போட்டிகளில் தோற்றால் நான் மிக மோசமான கேப்டன் என்பீர்கள்" எனக் கூறி அனைவரையும் திகைக்க வைத்தார். கேப்டன்சி விஷயத்தில் வெற்றிகளை விட, தோல்விகள் குறித்து ரொம்பவே உஷாராக இருக்கிறார் ரோஹித் சர்மா.
ஒருவேளை இந்த கேள்விக்கு ஒப்புக் கொள்வது போல ஏதாவது பேசி இருந்தால் அடுத்த தோல்வியின் போது அதை வைத்தே கிண்டலும், கேலியும் துவங்கி விடும். அதனால், தன்னை பாராட்டுவது போன்ற வில்லங்கமான கேள்விக்கு நெத்தியடி பதில் சொல்லி தப்பி இருக்கிறார் ரோஹித் சர்மா.