மும்பை: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவித்ததில் இருந்தே, இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. ஜிம்பாப்வே டி20 தொடரிலேயே விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, இளம் வீரரான சுப்மன் கில்லை கேப்டனாக்கி தேர்வுக் குழு தப்பியது.
ஆனால் இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய ஆலோசித்த போது, நிர்வாகிகளிடையே எழுந்த கருத்து வேறுபாடால் தேர்வு குழுவினர் கூட்டமே ஒத்தி வைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கவுதம் கம்பீர், அஜித் அகர்கர் உள்ளிட்டோர் சூர்யகுமார் யாதவிற்கு ஆதரவாக இருக்க, தேர்வுக் குழு உறுப்பினர்கள் ஹர்திக் பாண்டியா பக்கம் இருக்கின்றனர்.

சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருமே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்கள். இந்திய அணியின் கேப்டன் தான் மும்பை அணிக்கும் கேப்டனாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் ஹர்திக் பாண்டியாவை ரூ.115 கோடி கொடுத்து அம்பானி குடும்பத்தினர் மீண்டும் மும்பை அணிக்கு அழைத்து வந்து கேப்டனாக்கினார்கள்.
இதன் காரணமாக ரோகித் சர்மா கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட, மும்பை அணியில் பிரளயமே வெடித்தது. பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் ரோகித் சர்மா ஒரு அணியாக இருக்க, மற்றவர்கள் அணி நிர்வாகம் பக்கம் இருந்தனர். அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவுக்கு பின் சூர்யகுமார் யாதவ் அல்லது பும்ராவுக்கு தான் அடுத்த கேப்டன் பதவி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த பஞ்சாயத்து இந்திய அணி நிர்வாகத்திலும் இப்போது சிக்கலை கொடுத்துள்ளது. ஏனென்றால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா நீடித்து வருகிறார். இதனிடையே புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தரப்பில், டி20 கேப்டனாக நியமிக்கப்படுபவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடக் கூடியவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சிலர் சூர்யகுமார் யாதவ் பெயரை முன் மொழிய, ரோகித் சர்மாவும் ஆதரவாக இருப்பது தெரிய வந்துள்ளது. ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சிறுவயதில் இருந்தே மும்பை அணிக்காக விளையாடியவர்கள். இதனால் அம்பானி குடும்பத்தினர் மும்பை அணியில் செய்த மாற்றங்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு முக்கியமான நேரத்தில் சிக்கலை கொடுத்து வருகிறது.