திருஷ்ணகிரி : இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாக வாய்ப்புக்காக காத்திருக்காமல் கதவை உடைத்து உள்ளே வரவேண்டும் என்று ருதுராஜ் மற்றும் நடராஜன் ஆகியோருக்கு முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் பாலாஜி அறிவுரை கூறியுள்ளார்.
இந்தியா, இலங்கை அணிக்கு இடையிலான t20 மற்றும் ஒரு நாள் தொடர் வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ருதுராஜ், நடராஜன் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. சிறப்பாக விளையாடிய இருவரும் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாலாஜி கலந்து கொண்டார். அவரிடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பாலாஜி, இந்திய அணிக்கு தேர்வாகாமல் இருந்த முதல் வீரரும் ருதுராஜ் கிடையாது. கடைசி வீரரும் கிடையாது என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான்களாக கருதப்படும் கபில்தேர்,கவாஸ்கர் கங்குலி போன்ற வீரர்களே இந்திய அணிகள் தேர்வு செய்யப்படாமல் ஓரங்கட்டப்பட்டதை நினைவுகூர்ந்த பாலாஜி, இதனால் வீரர்கள் பொறுமையை இழந்து விடக்கூடாது என்று கூறியுள்ளார்.இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதும் படாததும் நமது கையில் இல்லை என்றாலும் வாய்ப்புக்காக கதவு திறக்கட்டும் என்று பொறுத்திருந்து இருக்காமல் கதவை உடைத்து கொண்டு உள்ளே வர வேண்டும் என்றும் பாலாஜி வலியுறுத்தினார்.
மேலும் ருதுராஜ், நடராஜன் ஆகியோர் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு நிச்சயம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் பாலாஜி குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் தேர்வு குறித்து சில நேரங்களில் நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட பாலாஜி முடிந்தவரை பொறுமை காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது குறித்து அஜித் அகார்கர் அளித்துள்ள விளக்கத்தில் 15 வீரர்கள் தான் அணிக்குள் தேர்வு செய்யப்பட முடியும் என்றும் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் டி20 உலக கோப்பையில் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி ருதுராஜ் சேர்க்கப்படாததை நியாயப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.