மும்பை: ஜிம்பாப்வே டி20 தொடரில் 3 இன்னிங்ஸ்களில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு அரைசதம் உட்பட 163 ரன்களை விளாசினார். இதன் காரணமாக இலங்கை டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுப்மன் கில், ரியான் பராக் உள்ளிட்டோரை தேர்வு செய்துவிட்டு, ருதுராஜ் கெய்க்வாடை இந்திய அணி நிர்வாகம் புறந்தள்ளியது.
இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கரை கடுமையாக விமர்சித்தனர். இந்திய அணிக்கு கேப்டனாகும் தகுதியுடன் இருக்கும் வீரரை தேர்வு செய்யாதது ஏன் என்று விளாசி தள்ளினர். ஏற்கனவே விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி போன்ற உள்ளூர் தொடர்களில் வெளுத்து கட்டியுள்ளார்.

இந்த நிலையில் இந்திய அணியில் இடம்பிடிக்க ருதுராஜ் கெய்க்வாட் மற்றொரு வழியை கண்டறிந்துள்ளார். இந்தியாவின் முக்கியமான உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தொடர் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இம்முறை மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கவுள்ளார். மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஐபிஎல், மகாராஷ்டிரா பிரீமியர் லீக், சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே உள்ளிட்ட தொடர்களில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தற்போது ரஞ்சி டிராபியிலும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளது சிஎஸ்கே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் போது ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் முன்னேறுவார்.
அதுமட்டுமல்லாமல் மகாராஷ்டிரா ரஞ்சி அணியில் ராகுல் த்ரிப்பாட்டி, சச்சின் தாஸ், விக்கி ஓஸ்ட்வால், பிரசாந்த் சொலங்கி, முகேஷ் சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் பயிற்சியாளராக சுலக்ஷன் குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை கேப்டனாக இருந்த கேதர் ஜாதவ் ஓய்வை அறிவித்துள்ளதால், முன்னணி வீரரான ருதுராஜ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2024-25 ரஞ்சி சீசனில் எலைட் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மகாராஷ்டிரா அணி மேகாலயா, திரிபுரா, பரோடா, ஒடிஷா, மும்பை, ஜம்மு - காஷ்மீர் மற்றும் சர்வீசஸ் அணிகளுடன் விளையாடவுள்ளது. ரஞ்சி டிராபி தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய தேர்வுக் குழுவினரால் தவிர்க்க முடியாத நிலைக்கு செல்வார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.