கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. முதல் போட்டிக்கு முன்பாகவே கொழும்பு மைதானம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்று இந்திய அணி நிர்வாகம் நன்றாக அறிந்திருந்தது. இதனை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
ஆனால் இலங்கை அணியின் ஸ்பின்னர்களான வெல்லாலகே, ஹசரங்கா, அசலங்கா, வாண்டர்சே உள்ளிட்டோரிடம் சிக்கி இந்திய அணி தடுமாறி வருகிறது. ரோஹித் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை. விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறி வந்துள்ளார்.

இளம் வீரர்களான சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சேப்பாக்கம் மைதானத்திலேயே ஸ்பின்னர்களை எதிர்கொள்ள தடுமாறுவார்கள். தற்போது இலங்கை மண்ணில் ஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் சொல்லவே தேவையில்லை. இதனால் இந்திய அணியின் தோல்விக்கு ரசிகர்கள் பலரும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழுவை சாடி வருகின்றனர்.
ஏனென்றால் இடது - வலது காம்பினேஷனில் பேட்டிங் வரிசையை அமைக்க கம்பீர் திட்டமிட்டிருந்தால், தேர்வு குழு மற்றும் ரோஹித் சர்மாவுடன் ஆலோசித்து முன்பே அதற்கேற்ப வீரர்களை தேர்வு செய்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்திய அணி டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா என்று தரமான 3 வீரர்கள் உள்ளனர்.
அவர்களையும் தேர்வு செய்யாமல் இந்திய அணியில் உள்ள ரிஷப் பண்ட்-ஐ பிளேயிங் லெவனில் சேர்க்காமல் கம்பீர் சொதப்பி இருக்கிறார். இன்னொரு பக்கம் இந்தியாவில் ஸ்பின்னர்களை சிறப்பாக விளையாடும் முதன்மையான வீரர்களில் ருதுராஜ் கெய்க்வாட் முக்கியமானவர். ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளில் ஸ்பின்னர்களை ஸ்டெப் அவுட் செய்து சச்சின் பாணியில் பொளந்து கட்டுவது ருதுராஜ் மட்டும் தான்.
கடந்த ஐபிஎல் தொடரில் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வந்த ஆஃப் திசையில் 5 ஃபீல்டர்கள் நின்றாலும், அசராமல் பவுண்டரி அடித்தார். ஏற்கனவே இந்திய ஒருநாள் அணிக்காக விளையாடி சிறப்பாக செயல்பட்ட ருதுராஜை பேக் அப் வீரராக கூட தேர்வு செய்யாமல் இந்திய அணி நிர்வாகம் தவறு செய்தது. அதற்கான பலனாக இலங்கை அணிக்கு எதிரான ஸ்பின்னர்களிடம் 9 விக்கெட்டை பறிகொடுத்து தோல்வியை சந்தித்துள்ளது என்று ரசிகர்கள் பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.