கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இலங்கை அணி நிர்ணயித்த 241 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணியையும், பயிற்சியாளர் கம்பீரையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்கு முன்பாக 15வது ஓவரின் போது, இலங்கை அணியின் அகிலா தனஞ்செயா பவுலிங் செய்து கொண்டிருந்தார். அந்த ஓவரில் தனஞ்செயா வீசிய பந்து விராட் கோலியின் பேடில் அடித்து சென்றது. உடனடியாக இலங்கை வீரர்கள் நடுவரிடம் அவுட் என்று அப்பீல் கேட்க, பின்னர் நடுவர் அவுட் என்று கைகளை உயர்த்தினார்.

இதனால் இலங்கை அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாட தொடங்கினர். ஆனால் விராட் கோலி உடனடியாக டிஎஸ்எஸ் முறையீடு செய்தார். அதில் ரீபிளேவின் போது தனஞ்செயா வீசிய பந்து விராட் கோலி பேட்டில் உரசி சென்று கால்களில் அணிந்திருந்த பேடில் அடித்தது தெரிய வந்தது. ஸ்னிக்கோமீட்டரில் வெளிப்படையாக தெரிய வந்தது. பின்னர் நடுவர் வேறு வழியின்றி அவுட் என்ற முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
இதனால் விராட் கோலி சிரிப்பை வெளிப்படுத்த, நடுவரின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் விரக்தியை வெளிப்படுத்தினர். அந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் குசால் மெண்டிஸ் தனது ஹெல்மெட்டை கீழே வீசி கோபத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் அசலங்காவும் நடுவரிடம் கொந்தளித்தார்.
இது போதாதென்று இலங்கை அணியின் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா அருகில் நின்றிருந்த ரிசவ்ர் நடுவரிடம் சென்று கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ஆட்டம் முடிவடைந்த பின் விராட் கோலி - சனத் ஜெயசூர்யா இருவரும் கைகுலுக்கு கொண்டனர். அப்போது விராட் கோலியிடம் சில நிமிடங்கள் பேசிய ஜெயசூர்யா, தனது தவறுக்கு சமாதானம் செய்தார்.
இதனை உடனடியாக ஏற்றுக் கொண்ட விராட் கோலி, ஜாம்பவானான சனத் ஜெயசூர்யாவிடம் சிரித்து கொண்டே விடைபெற்றார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. களத்தில் இருக்கும் போது ஆக்ரோஷமும், களத்தில் வெளியில் நட்பும் என்று இரு நட்சத்திரங்களும் செயல் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.