மும்பை: இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது இந்திய அணி. இதை அடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கவுதம் கம்பீரின் கீழ் ஆடிய முதல் தொடரில் இந்தியா வெற்றி பெற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இதற்கு எதிரான கருத்துக்களை கூறி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் இல்லாமல் கூட உலக கோப்பை வென்று இருக்கிறது. எனவே, பயிற்சியாளருக்கும் இந்திய அணியின் வெற்றிக்கும் சம்பந்தம் இருப்பதாக கருத்துக்களை கூற வேண்டாம் என அவர் கடுமையாக விளாசி இருக்கிறார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கவுதம் கம்பீரை மறைமுகமாக சாடி இருக்கிறார் என்பதால் இது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். அவரின் கீழ் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பை வென்றது. அந்த வெற்றிக்கு ஒருவரை மட்டுமே காரணம் என யாரும் கூறவில்லை. கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப் சிங் என அனைவருக்கும் அந்த பாராட்டுக்கள் சென்று சேர்ந்தன.
அந்த உலகக் கோப்பைக்கு பின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விடை பெற்றார். அதன்பின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அப்போது இருந்தே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. "கவுதம் கம்பீர் சகாப்தம்" துவங்கியதாக ரசிகர்கள் பலரும் அதை சிலாகித்து பேசி வந்தனர். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கவுதம் கம்பீர் தனது பணிகளை துவக்கினார்.
அவரின் கீழ் நடைபெற்ற முதல் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. கவுதம் கம்பீரின் சகாப்தத்தில் இந்தியா வெற்றிப் பயணத்தை துவக்கி இருப்பதாக பலரும் பாராட்டி வந்தனர். இந்த நிலையில், முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது குறித்து கடுமையாக பேசி இருக்கிறார்.
"1983 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பயிற்சியாளர் இல்லை. 2007 டி20 உலகக் கோப்பையில் தற்காலிக பயிற்சியாளராக லால் சந்த் ராஜ்புத் நியமிக்கப்பட்டு இருந்தார். 2011 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் பயிற்சியாளராக முன் அனுபவம் இல்லாத கேரி கிர்ஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். 2024 டி20 உலகக் கோப்பையில் அனுபவம் வாய்ந்த ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார்."
"இதன் மூலம் இந்திய அணி பயிற்சியாளர் இருந்தாலும் உலகக் கோப்பையை வென்று இருக்கிறது. அனுபவம் இல்லாத பயிற்சியாளர்களை வைத்தும் உலகக் கோப்பை வென்று இருக்கிறது. சிறந்த பயிற்சியாளரை கொண்டும் உலகக் கோப்பை வென்று இருக்கிறது. எனவே, இந்திய அணியின் வெற்றிக்கும் பயிற்சியாளருக்கும் நேரடி சம்பந்தம் எதுவும் இல்லை. எனவே, அப்படி சிந்திப்பதை நாம் நிறுத்துவதற்கான நேரம் இது." என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறி இருக்கிறார். இதன் மூலம் ரசிகர்கள் கவுதம் கம்பீருக்கு பில்டப் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என மறைமுகமாக சாடி இருக்கிறார்.