பல்லேகேலே: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. முந்தைய போட்டியில் அவர் டக் அவுட் ஆகி இருந்த நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர். ஆனால், இந்த முறையும் டக் அவுட் ஆகி மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அளித்தார்.
இதை அடுத்து, இதுவரை அவருக்கு ஆதரவாக பேசி வந்த ரசிகர்களும் நொந்து போய் இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சனுக்கு சரியான வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதுமே உள்ளது. இந்த நிலையில், கவுதம் கம்பீர் பயிற்சியாளர் ஆனவுடன் சஞ்சு சாம்சனுக்கு அதிக வாய்ப்பு அளிப்பார் என்ற பேச்சு கிளம்பியது.

இதற்கு முன் கவுதம் கம்பீர் வர்ணனையாளராக இருந்தபோது பலமுறை சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். அதனால், அவர் பயிற்சியாளர் ஆன பின் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு கொடுப்பார் என கூறப்பட்டது. அதே போல, இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் போட்டியில் சஞ்சு சங்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படாத போதும், இரண்டாவது போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இரண்டாவது போட்டிக்கு முன்னதாக சுப்மன் கில்லுக்கு கழுத்து வலி ஏற்பட்ட போது சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு அளித்தார் சாம்சன்.
அடுத்து, மூன்றாவது டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார். இரண்டாவது போட்டியில் சஞ்சு சாம்சன், தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி இருந்தார். இதை அடுத்து அவர் மூன்றாவது டி20 போட்டியில் அணியில் இடம்பெற மாட்டார் என்ற பலரும் எண்ணினர்.
ஒரு வீரருக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு அளித்துவிட்டு அவர் சரியாக ஆடவில்லை என விமர்சனம் செய்யக்கூடாது என ரசிகர்கள் அப்போது சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசி வந்தனர். இந்த நிலையில். மூன்றாவது டி20 போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளித்து ஆச்சரியத்தை தந்தார் கவுதம் கம்பீர். இதன் மூலம், சஞ்சு சாம்சன் மீது அவர் எத்தகைய நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து மூன்றாவது வரிசையில் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். மறுபுறம் சுப்மன் கில் நிதான ஆட்டம் ஆடி வந்த நிலையில் சஞ்சு சாம்சன், முதல் மூன்று பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. நான்காவது பந்தில் அவர் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 4 பந்துகளை மட்டுமே சந்தித்து டக் அவுட் ஆகி இருந்தார்.
தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வாய்ப்பு பெற்று, இரண்டிலும் டக் அவுட் ஆனதால், இதுவரை சஞ்சு சம்சனுக்கு ஆதரவாக பேசி வந்த ரசிகர்களே இப்போது அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர். "இனியும் சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட் ஆட வேண்டிய அவசியம் இல்லை. அவர் இப்போதே ஓய்வை அறிவித்து விட்டு செல்லலாம்" என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.