மும்பை: இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் கருத்து தெரிவித்துள்ளார். நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறிய அவர், இந்திய ஒருநாள் அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டால் நிச்சயம் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 2 போட்டிகளிலும் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதனிடையே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.

அதேபோல் ஒருநாள் போட்டியில் தேர்வு செய்யப்பட்டிருந்த கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவருமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் சஞ்சு சாம்சனை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று கருத்துகள் எழுந்தன. இந்த நிலையில் ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்படாதது குறித்து சஞ்சு சாம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இந்திய அணிக்காக விளையாட எப்போது என்னை தேர்வு செய்கிறார்களோ, அப்போது நிச்சயம் விளையாடுவேன். அவ்வளவு தான். கடைசியில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடுவது தான் தேவையான விஷயம். எப்போதும் ஒன்றை தேர்வு செய்கிறோம் என்றால், அதன் தேவையை தான் பார்க்க வேண்டும். நானும் அப்படியான மனிதர் தான். அதனால் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. அடுத்த இலக்கை நோக்கி நாம் பணியாற்ற வேண்டும். கவுதம் கம்பீருக்கு கீழ் இந்திய அணியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன் அடுத்ததாக கேரளாவில் நடத்தப்படவுள்ள பிரீமியர் லீக் தொடரில் விளையாட தயாராகி வருகிறார்.
தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் தொடரை போல் கேரளாவிலும் நடத்தப்படவுள்ளது. அதன்பின் புஜ்ஜி பாபு தொடர், ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் உள்ளிட்டவற்றில் விளையாடவுள்ளார். இதனிடையே வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.