துபாய்: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சனின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. நம்பர் 5 பேட்ஸ்மேனாக மிடில் ஆர்டரில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், 21 பந்துகளில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 39 ரன்களை விளாசி அசத்தினார். இதனால் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு மிடில் ஆர்டரில் சரியான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. இந்த ஆசியக் கோப்பை தொடரில் 200 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணியாக இந்திய அணி பெருமையை பெற்றுள்ளது.

சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 31 பந்துகளில் 2 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 61 ரன்களை விளாசி தள்ளினார். அதேபோல் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 23 பந்துகளில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 39 ரன்களை விளாசி தள்ளினார். மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் ஆடிய கேமியோ இன்னிங்ஸ் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக ஸ்பின்னர்களை சஞ்சு சாம்சன் அட்டாக் செய்த விதம், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருக்கும் பதிலடி கொடுக்கப்பட்டதை போல் அமைந்தது. ஏனென்றால் கடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருந்த போதும், அக்சர் படேலை களமிறக்கி அதிர்ச்சி கொடுத்தனர்.
அதேபோல் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கும் சஞ்சு சாம்சன் இருந்தும் சிவம் துபேவை நம்பர் 3ல் களமிறக்கினார்கள். அதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் விளையாட இன்னும் தயாராகவில்லை என்ற தோற்றத்தை துணைப் பயிற்சியாளர் ரியான் மூலமாக உருவாக்கினார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சு சாம்சனின் இன்றைய ஆட்டம் அமைந்தது.
மிடில் ஆர்டரிலும் தன்னால் அட்டாக்கிங் கிரிக்கெட்டை விளையாட முடியும் என்பதை சஞ்சு சாம்சன் நிரூபித்து காட்டி இருக்கிறார். இதனால் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் வரிசையை மாற்றாமல் இந்திய அணி நிர்வாகம் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சூர்யகுமார் யாதவ் எதிர்பார்த்த ஃபார்மில் இல்லை.
இதனால் தொடக்க வீரர்களில் ஒருவர் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினால், அந்த இடத்தில் உடனடியாக சஞ்சு சாம்சனை விளையாட வைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் அளிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் பவர் பிளேவில் சஞ்சு சாம்சனுக்கு எப்படி ரன்களை எடுக்க வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.