மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்திய அணியின் கேப்டனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, மொத்தமாக ஓரம்கட்டப்பட்டுள்ளார்.
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் மற்றும் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக இந்திய அணி நிர்வாகம் கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை மொத்தமாக ஓரம்கட்டியுள்ளது.

இவர்கள் மூவருமே இந்திய அணியை ஏற்கனவே வழிநடத்திய அனுபவம் கொண்டவர்கள். திடீரென சுப்மன் கில்லுக்கு இந்திய அணியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன், தேர்வு குழுவினர் ஏன் சுப்மன் கில்லுக்கு பதவியை அளிக்க முன் வந்தார்கள் என்பது குறித்து விசாரிக்கையில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் தெரிய வந்துள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கொண்டு வரப்பட்டுள்ள சூழலில், அடுத்த கேப்டனையும் தயார் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில் எட்டிய வளர்ச்சி, டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 3 வரிசையில் தானாக முன் வந்து பேட்டிங்கில் அசத்தியது என்று தேர்வு குழுவினரின் நம்பிக்கையை பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகிய 2 வீரர்களுமே அதிகளவில் காயமடையக் கூடிய வீரர்களாக இருக்கின்றனர். ரிஷப் பண்ட் நீண்ட இடைவெளிக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளார். பும்ராவை அனைத்து போட்டிகளிலும் விளையாட வைக்க முடியாது என்பதாலும், அடுத்த ரன் மெஷினாக சுப்மன் கில் இருப்பதாக அவருக்கு துணை கேப்டன்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியாவை ஓரம்கட்டுவதற்கும், சுப்மன் கில்லை ஆதரிப்பதற்கும் இதுவே காரணங்களாக அமைந்துள்ளது. இந்த முடிவினை தேர்வுக் குழு நிர்வாகிகள், கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட அனைவரும் இணைந்தே எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக புரிந்து கொள்ள முடிகிறது.