கொல்கத்தா : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி.
2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்விகளை சந்தித்து இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.

ஆனால், அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் ஏழு போட்டிகளில் ஆடி 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதன் சராசரி 30 மட்டுமே. இதில் அவர் மூன்று அரைசதம் அடித்துள்ளார். ஆனால், அந்த மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்து இருக்கிறது.
இந்த நிலையில், ஷாஹித் அப்ரிடி கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இந்திய அணியில் விராட் கோலி, கே எல் ராகுல் போன்றோர் அணியின் வெற்றிக்காக ரன் சேர்க்கிறார்கள். ஆனால், பாபர் அசாம் 50 - 60 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களத்துக்கு வருவது போலத் தான் இருக்கிறது. அவர் போட்டிகளை வெல்வதற்காக பேட்டிங் செய்கிறார் என்ற எண்ணம் வர மறுக்கிறது என்றார் ஷாஹித் அப்ரிடி.
ஷாஹித் அப்ரிடி இப்படி கூற மற்றொரு காரணமும் உள்ளது. பாபர் அசாம் அரைசதம் அடிக்க வேண்டும் என்பதற்காக நிதான ஆட்டம் ஆடுகிறார். பந்துகளை வீணடிக்கிறார் என்ற புகாரும் உள்ளது. உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் இந்தியாவுக்கு எதிராக 50 ரன்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் அவர் நிதானமாக ஆடினார், பாகிஸ்தான் அணியும் தோல்வி அடைந்தது.
ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா போட்டிகளிலும் இதே தான் நடந்தது. இது குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ஷாஹித் அப்ரிடி, "50 - 100 ரன்கள் எடுப்பது வேறு, பாபர் அசாம் அடித்த ரன்களை வைத்து போட்டியில் வெற்றி பெறுவது என்பது வேறு. விராட் கோலி, கே எல் ராகுல் போன்றோர் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ரன் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்கிறார்கள்." என்றார் அப்ரிடி.
மேலும், "பாபர் அசாமுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. சில சமயம் அவர்களுக்கு ஒரு வீரரிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்க வேண்டும் என சொல்வது கடினமாக உள்ளது. பாபர் அசாம் சிறந்த வீரர். அவர் அந்த இடத்தை அடைந்த பின் அதை தொடர்ந்து தக்க வைக்க முயல்கிறார். ஆனால், அவர் போட்டியில் ஆட வரும் போது அவர் 50 - 60 ரன்கள் எடுக்கவே களத்துக்கு வருகிறார். நமக்காக போட்டியை வென்று கொடுக்க அவர் வரவில்லை என்ற எண்ணமே வருகிறது. அந்த எண்ணம் வருவதை நாம் விரும்பவில்லை" என்றார் ஷாஹித் அப்ரிடி.