டி20 போட்டி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அபாரமாக செயல்பட்டு அசத்தியது. இலங்கை அணி நிர்ணயித்த 143 ரன்கள் இலக்கை எளிதாக எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்
இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்கள் தான் அதிக ஆதிக்கம் செலுத்தினர். அதிலும் வேகப் பந்துவீச்சாளர்கள் மிரட்டலாக செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்தி, ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.
ஒரே ஓவரில் 3 விக்கெட்
இந்தப் போட்டியில் மூன்று லோயர் ஆர்டர் விக்கெட்களை ஒரே ஓவரில் எடுத்து இலங்கை அணியை கடைசி நேரத்தில் ஸ்தம்பிக்க வைத்தார் ஷர்துல் தாக்குர். இந்திய பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவரும் இவரே.
அணியில் இடம் உறுதியாகுமா?
தன் அசத்தலான ஆட்டத்தை அடுத்து இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்குமா? என ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார் ஷர்துல். கேப்டன் கோலி போட்டி முடிந்தவுடன் அவரை பாராட்டி பேசியதும் குறிப்பிடத்தக்கது.
அதிக பந்துவீச்சாளர்கள்
இந்திய அணியில் தற்போது அதிக வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அதே சமயம், கேப்டன் கோலி வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அது பெரிய அளவில் பலன் அளித்து வருகிறது.
மூவர் கூட்டணி
அனுபவம் மற்றும் திறன் அடிப்படையில் முன்னணி பந்துவீச்சாளர்களாக பும்ரா, முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் ஒருநாள் மற்றும் டி20 அணியில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றனர்.
தீபக் சாஹர், சைனி
இளம் பந்துவீச்சாளர்களில் முகமது சிராஜ், கலீல் அஹ்மது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி என பலர் வரிசையில் உள்ளனர். இவர்களில் தீபக் சாஹர் மற்றும் நவ்தீப் சைனி ஓரளவு சிறப்பாக செயல்பட்டு தங்கள் வாய்ப்பை தக்க வைத்துள்ளனர்.
வாய்ப்பை பயன்படுத்தினார்
இந்த நிலையில் தான் ஷர்துல் தாக்குர் இந்திய அணியில் தனக்கும் இடம் வேண்டும் என போராடத் துவங்கி இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது மாற்று பந்துவீச்சாளராக அணியில் இடம் பெறுவதும், போட்டிகளில் வாய்ப்பின்றி அமர்வதுமாக இருந்த அவர், இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்.
தோனியின் நம்பிக்கை
ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2019 சீசனில் சில போட்டிகளில் ஆடினார் ஷர்துல். அந்த தொடரில் சிஎஸ்கே அணியிடம் அதிக வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் ஷர்துல் தாக்குர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்தார் தோனி.
ஐபிஎல் வாய்ப்பு பிரகாசம்
ஐபிஎல்-இல் இதுவரை ஷர்துல் தாக்குர் பெரிதாக சாதிக்கவில்லை. எனினும், தற்போது இலங்கை தொடரில் அசத்தலாக ஆடி இருக்கும் அவர் ஒரே நேரத்தில் சிஎஸ்கே அணி மற்றும் இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரிலும் கலக்கினால், 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.