மும்பை: இந்திய அணியின் அடுத்த வேகப்பந்து வீச்சாளராக உருவாகி இருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சிவம் துபே. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருந்த ஒரே வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மட்டுமே.
அவருக்கு மாற்று வீரரை உருவாக்க இந்திய அணி பல முறை முயன்றும் இத்தனை ஆண்டுகளில் அது நடக்கவில்லை. இந்த நிலையில் தான், ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பேட்ஸ்மேனாக சிஎஸ்கே அணியில் முத்திரை பதித்து இருந்த சிவம் துபேவுக்கு, இந்திய அணியில் இடம் கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஆல் ரவுண்டராக பயன்படுத்தாத போதும், இந்திய அணிக்கு வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் தேவை என்பதால் இந்திய அணியில் அவருக்கு பந்து வீசும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2024 டி20 உலகக் கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியா உடன் சிவம் துபே இடம் பெற்றார். ஆனால், அப்போது சிவம் துபே பந்து வீச அதிக வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அது உலகக் கோப்பை என்பதால் ஒரு சில ஓவர்கள் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் பின் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சிவம் துபே மூன்று போட்டிகளில் பங்கேற்றார்.
அந்த மூன்று போட்டிகளிலும் அவருக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் முதல் போட்டியில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த அவர், அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் தனது பந்து வீச்சில் முத்திரை பதித்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இரண்டு ஓவர்களில் 11 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஐந்தாவது டி20 போட்டியில் நான்கு ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
இந்த தொடரில் ஐந்தாவது போட்டியில் மட்டுமே சிவம் துபேவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதில் அதிரடியாக ஆடி 12 பந்துகளில் 26 ரன்கள் குவித்து இருந்தார். இதை அடுத்து அவர் முதன்முறையாக இந்திய அணியில் தன்னை ஒரு ஆல் - ரவுண்டராக நிரூபித்து இருக்கிறார்.
தற்போது ஹர்திக் பாண்டியா, இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படப் போவதில்லை என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. மேலும், அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதாலேயே அவரை கேப்டனாக்கப் போவதில்லை என்றும் கூறப்படுகிறது. சரியாக இந்த சமயத்தில் சிவம் துபே தன்னை வேகப் பந்து வீச்சு ஆல் - ரவுண்டராக நிரூபித்து இருக்கிறார்.
இதை அடுத்தி இனி சிவம் துபே இந்திய டி20 அணியில் தொடர்ந்து இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம், ஹர்திக் பாண்டியா காயத்தால் வெளியேறினால் சிவம் துபே இந்திய டி20 அணியில் ஆல் ரவுண்டதாக முக்கியத்துவம் பெறுவார். இதுவரை தனக்கு போட்டியாளர்கள் என யாரும் இல்லாததால் ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஆனால், இனி அவர் தூக்கத்தை தொலைக்க போகிறார் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.