லாகூர் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த அணிக்கு எதிரான மாபெரும் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
அதற்கு அடுத்து இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக ஆடிய போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 356 ரன்கள் குவித்த இந்திய அணி அதே மைதானத்தில் அதற்கு மறுநாள் நடந்த போட்டியில் வெறும் 213 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அப்போது போட்டியை இந்திய அணி பிக்ஸிங் செய்து விட்டதாக இந்தியாவில் இருந்தே தனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்ததாக கூறி இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர்.
பாகிஸ்தான் அணியின் நிலை : ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி அடுத்து இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது. அதே சமயம், இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தோல்வி அடைந்தால், இலங்கை அணிக்கு கூடுதலாக 2 புள்ளிகள் கிடைத்து அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்ற நிலையும் இருந்தது.
அந்த அச்சம் : அப்போது தான் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறி வந்தது. அப்போது இந்திய அணி தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டது. பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் இந்திய அணி வேண்டுமென்றே போட்டியில் தோல்வி அடைந்து பாகிஸ்தான் வாய்ப்பை பறிக்க திட்டமிட்டுள்ளது என்றனர்.
அக்தர் உளறல் : அதைப் பற்றித் தான் சோயப் அக்தர் இந்தியா பிக்ஸிங் செய்தது என பிதற்றலாக உளறி இருக்கிறார். அக்தர் தான் நடத்தி வரும் யூட்யூப் சேனலில் கிரிக்கெட் போட்டிகள் குறித்த விமர்சனங்களை பேசி வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அதில் இப்படி ஒரு வீடியோ போட்டு வருமானம் பார்த்து இருக்கிறார்.
வீடியோவை பார்க்க வைக்கும் உத்தி : முதலில் அந்த வீடியோவின் முகப்பில் "இந்தியா போட்டியை பிக்ஸ் செய்தது" என வைத்து விட்டார். அதைப் பார்த்த பலரும் பெரும் எதிர்பார்ப்பில் அந்த வீடியோவை பார்க்கத் துவங்கினர்.
என்ன சொன்னார் அக்தர்? : அதில் அவர் சொன்னது இதுதான், "எனக்கு இந்தியா போட்டியை பிக்ஸ்செய்து விட்டதாக மெசேஜ்கள் வந்தன. இந்தியா வேண்டுமென்றே பாகிஸ்தானை தொடரில் இருந்து வெளியேற்ற தோல்வி அடையப் போகிறது என கூறினார்கள். இந்தியாவில் இருந்தும், மற்ற நாடுகளில் இருந்தும் ரோஹித் அணி வேண்டுமென்றே தோல்வி அடைய உள்ளது என்றார்கள். ஆனால், அவர்கள் ஏன் தோல்வி அடைய வேண்டும்? அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறவே விரும்புவார்கள். இதுபோன்ற பயனற்ற மீம்ஸ் போடுவதை நிறுத்துங்கள். இந்தியா அந்தப் போட்டியில் சிறப்பாக போராடி இருந்தது" என குறிப்பிட்டிருந்தார். ஆக மொத்தத்தில் தன் வியாபாரத்துக்காக இப்படி ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார்.
இந்தியா அசத்தல் வெற்றி : அந்தப் போட்டியில் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதனால், இலங்கை அணி நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை ஆட வைத்து இந்திய அணிக்கு அழுத்தத்தை கொடுத்தது. பேட்டிங்கில் தடுமாறினாலும், பந்துவீச்சில் ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் என் இந்திய அணி தனது சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்களை வீழ்த்தி 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா போன்ற வேகப் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி இருந்தது குறிப்பிடத்தக்கது.