மும்பை: இந்திய ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்து அவர் டெஸ்ட் அணியில் பும்ராவின் பதவிக்கும் வேட்டு வைக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டி20 அணியில் அவருக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டது பெரிய விவாதமாகி இருக்கும் நிலையில், அடுத்த அதிரடியை காட்டப் போகிறார் கவுதம் கம்பீர்.
சுப்மன் கில் இன்னும் கேப்டன் ஆகும் தகுதியை பெறாத நிலையில், அவருக்கு ஏன் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டது? அவரை விட மூத்த வீரர்கள் பலரும் ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் இருக்கின்றனர் என ரசிகர்கள் பலரும் சுட்டிக்காட்டி இருந்தனர். டெஸ்ட் அணியில் எந்த மாற்றமும் நடக்காது என்றே பலரும் எண்ணினர்.

இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டன் ஆகவும் இருக்கின்றனர் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின் பும்ரா டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதற்கும் சுப்மன் கில் வேட்டு வைக்கப் போகிறார் என்கிறார்கள். அடுத்த மாதம் நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்படி என்றால் பும்ராவின் துணை கேப்டன் பதவி பறிக்கப்படும். அவரால் டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உம்ரா உலகின் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக இருக்கும் அதே நேரத்தில் இந்திய அணியை எத்தனையோ போட்டிகளில் வெற்றி பெற வைத்துள்ளார். பல டெஸ்ட் தொடர்களில் அவரது பவுலிங் திட்டத்தின் கீழ் இந்திய அணி செயல்பட்டு வெற்றிகளை பெற்று இருக்கிறது.
அதன் அடிப்படையில் அவர் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டால் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை விமர்சகர்கள் மத்தியில் உள்ளது. இதனிடையே தான் சுப்மன் கில்லுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து கிரிக்கெட் அணிகளிலும் ஒரே கேப்டன் இருக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்னிறுத்தி கில்லுக்கு மூன்று வித அணிகளிலும் துணை கேப்டன் பதவி அளிக்கப்பட உள்ளது.
சுப்மன் கில்லை பொறுத்த வரை ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே அவர் இதுவரை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அதற்கு அடுத்து டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக செயல்பட்டு வருகிறார். அதில் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறார். டி20 போட்டிகளில் அதைவிட மோசமான நிலையில் இருக்கிறார். அப்படி இருந்தும் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள பிசிசிஐ மற்றும் கம்பீர் அவரை வருங்கால கேப்டன் ஆக்க முயன்று வருகிறார்கள். அதனால், பும்ரா பெரிய அளவில் ஏமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது.