கொழும்பு : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டி தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் இலங்கை அணி வெற்றி பெற்று இருக்கிறது. முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை வென்றது.
இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தொடரில் இந்திய அணியை இலங்கை வீழ்த்தி கைப்பற்றி இருக்கிறது. இலங்கை அணி எவ்வாறு வென்றது என்பது குறித்து கேப்டன் அசலங்கா கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் பேசியதாவது, முதலில் நான் சந்தோஷமான கேப்டனாக இருக்கின்றேன்.

இந்த தொடர் முழுவதும் நாங்கள் சரியான விஷயங்களை செய்து வெற்றி பெற்றிருக்கிறோம். இந்திய அணியின் பேட்டிங் எவ்வளவு பலமானது என்று எங்களுக்கு நன்றாக தெரியும். இதனால் எங்களுடைய பலம் என்ன என்பது குறித்து கண்டறிந்து அதை நாங்கள் சரியாக செய்தோம்.
எங்களுடைய பலம் சுழற் பந்து வீச்சு தான். எங்களுடைய பேட்டர்கள் இந்த தொடரில் தடுமாறினார்கள். எனினும் நீங்கள் தொடரை வெல்ல வேண்டும் என்றால் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தான் உருவாக்க வேண்டும். அதை தான் நாங்கள் செய்திருக்கிறோம். தற்போது நாங்கள் நல்ல மனநிலையில் இருக்கின்றோம். குறிப்பாக எங்களுடைய பயிற்சியாளர் எங்களுக்கு துணையாக நின்றார்.
எங்கள் அணியில் சில மாற்றங்களை அவர் செய்து இருக்கிறார். அது நல்ல பலனை கொடுத்திருக்கிறது. எங்கள் அணி வீரர்கள் இந்த தொடரையும் அணியில் உள்ள சூழலையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார்கள் என்று அசலங்கா கூறியுள்ளார். பொதுவாக இந்திய அணி தான் தங்களுக்கு சாதகமாக ஆடுகளங்களை தயாரித்து வெற்றி பெறும் என்று குற்றச்சாட்டு வைக்கப்படும்.
அதுவும் ஆசியாவுக்கு வெளியே இருந்து வரும் அணி தடுமாறும் என்பதற்காகவே சுழற்பந்துவீச்சுக்கான ஆடுகளங்கள் தயாரிக்கப்படும் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் மருந்தை இந்தியாவுக்கே இலங்கை திருப்பிக் கொடுத்திருக்கிறது. தற்போதுள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கவே இப்படி ஒரு பிச்சை தயார் செய்தோம் என்று கேப்டன் அசலங்கா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.