விராட் கோலி, ரோகித் சர்மா கூட வரட்டும்.. அந்த பவுலர் மட்டும் வேண்டாமே.. எதிர்க்கும் இலங்கை ரசிகர்கள்!
மும்பை: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சுற்றுப்பயணம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி தேர்வு இன்று நடக்கவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு அனைவரும் திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் குறித்து தேர்வு குழுவினர் முடிவு செய்யவுள்ளனர்.

அதேபோல் ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் உள்ளிட்ட பலரும் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு திரும்பவுள்ளனர். இந்த நிலையில் இலங்கை அணி ரசிகர்கள் பலரும் இந்திய அணி வீரர்களின் வரவை எதிர்பார்த்துள்ளனர். ஆசியக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி முதல்முறையாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்கிறது.
இந்த நிலையில் இலங்கை அணி ரசிகர்கள் ஒரேயொரு வீரர் மட்டும் வர வேண்டாம் என்று எதிர்த்து வருகின்றனர். அது வேறு யாரும் அல்ல, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தான். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை ஒரே ஸ்பெல்லில் சுக்குநூறாக உடைத்துவிட்டார். 7 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தார் சிராஜ்.
இதனால் 50 ரன்களுக்கு இலங்கை அணி சுருண்டது. அதேபோல் உலகக்கோப்பை தொடரிலும் இலங்கை அணியின் டாப் ஆர்டரை சிராஜ் மொத்தமாக வீழ்த்தினார். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் கால்பந்து ஸ்கோரை போல் மாறியது. எப்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் விளையாடுவாரோ, வங்கதேச அணிக்கு எதிராக ரோகித் சர்மா அசத்துவாரோ, அப்படி இலங்கை அணிக்கு எதிராக சிராஜ் மிரட்டுவார்.
இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் வந்தாலும் கூட, சிராஜ் மட்டும் வர வேண்டாம் என்று இலங்கை அணி ரசிகர்கள் பலரும் பழைய நியாபகங்களை பகிர்ந்து வருகின்றனர். இலங்கை ரசிகர்கள் மனதில் சிராஜ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இந்திய ரசிகர்களையும் பிரமிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications