மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதெல்லாம் இந்திய அணி தோல்வியடைகிறதோ அப்போது இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இந்திய ரசிகர்களை வம்புக்கு இழுப்பதும், கலாய்ப்பதும் வழக்கமாக நடந்து வருகின்றன.
அதேபோல் இந்திய அணியிடம் தோற்கும் அணிகளுக்கு மற்ற நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் அட்வைஸ் செய்வதும், விமர்சிப்பதும் நடந்து வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியிடம் 2-0 என்ற கனக்கில் டி20 தொடரை இழந்த இலங்கை அணியை பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கம்ரான் அக்மல் பேசுகையில், இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை அணி 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்திருக்கிறது. எளிதாக 190 ரன்களை எடுக்க வேண்டிய சூழலில் இருந்து, அப்படியே தலைகீழாக குதிப்பேன் என்று மோசமான விளையாடி இருக்கிறார்கள். இதற்கு இலங்கை அணி வீரர்கள் அவர்களையே தான் குற்றம் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் அணியில் உள்ள ஒரு வீரரும் பொறுப்பை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதிலும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன்களான ஷனகா மற்றும் ஹசரங்கா இருவரும் ஆட்டமிழந்ததை பார்க்கும் போது, ஏதோ எல்கேஜி குழந்தைகள் விளையாடுவதை போல் இருந்தது. கிரிக்கெட் விளையாட்டு குறித்த விழிப்புணர்வோ, பொறுப்பே இலங்கை வீரர்களிடம் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2 டி20 போட்டிகளிலும் இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சொதப்பி இருக்கிறார்கள். முதல் டி20 போட்டியில் 31 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி மோசமான தோல்வியை பெற்றது. அதேபோல் 2வது டி20 போட்டியில் 32 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதேபோல் இந்திய அணி இளம் வீரர்களோடு களமிறங்கிய போதும், டி20 சாம்பியன் அணி எப்படி விளையாடுமோ அப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக இளம் வீரர்கள், அறிமுக வீரர்களை கொண்டு சூர்யகுமார் யாதவ் அனுபவம் வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.