கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியின் மூலமாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், கவுதம் கம்பீர் பயிற்சியாளராகவும் புதிய பயணத்தை தொடங்கவுள்ளனர். டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவர்களின் இடத்தை நிரப்ப ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஜெய்ஸ்வால் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆனால் சுப்மன் கில் இதுவரை டி20 போட்டிகளில் பெரிதாக தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடி இருக்கிறார். அதிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக மட்டுமே சிறப்பாக ஆடி இருக்கிறார்.

இலங்கை டி20 தொடரில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டிருந்தாலும், அவர் தலைக்கு மேல் கத்தி தொங்குவதாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியின் தொடக்க வீரர்களுக்கான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் முன்னிலையில் இருக்கிறார். அதேபோல் அபிஷேக் சர்மா சதம் விளாசி அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
ஒப்பீட்டளவில் சுப்மன் கில்லை விடவும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிஷேக் சர்மா இருவருமே அதிரடியாக விளையாடக் கூடிய வீரர்கள். ருதுராஜ் கெய்க்வாட் ஸ்ட்ரைக் ரேட் 148ஆக உள்ள நிலையில், அபிஷேக் சர்மாவின் ஸ்ட்ரைக் 160க்கு மேல் இருக்கிறது. ஆனால் சுப்மன் கில்லின் ஸ்ட்ரைக் ரேட் இதுவரை 120ஐ தாண்டியதில்லை. அதுமட்டுமல்லாமல் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டை காப்பாற்றி மனநிலையுடன் சுப்மன் கில் விளையாடுவார்.
டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் அட்டாக்கிங் பாணியிலேயே ஆட்டம் காரணமாக அமைந்தது. அவருக்கு பின் வரும் வீரர்களும் கடைசி வரை அட்டாக்கில் இருந்து பின் வாங்கவில்லை. இதன் காரணமாகவே நம்பர் 8 வரை இந்திய அணியின் பேட்டிங் வரிசை அமைக்கப்பட்டது.
இந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் தனது ஸ்டைலை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், நிச்சயம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கவுதம் கம்பீரை பொறுத்தவரை ஒவ்வொரு வீரருக்கும் ரோல் கொடுத்துவிட்டால், அதனை சரியாக செயல்படுத்த வேண்டும். இதனால் கம்பீரின் திட்டத்திற்கு சுப்மன் கில் தகவமைத்து கொள்வாரா என்பதே அவருக்கான முக்கிய பரீட்சையாக பார்க்கப்படுகிறது.