கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 40 ரன்களும், வெல்லாலகே 39 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் நின்றிருந்த சுப்மன் கில் நிதானமாக ரன்கள் சேர்க்க, இந்திய அணி 13 ஓவர்கள் முடிவில் 95 ரன்களை சேர்த்திருந்தது. அப்போது வாண்டர்சே வீசிய 14வது ஓவரில் ரோஹித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பானது.

இதன்பின் சுப்மன் கில் - விராட் கோலி இணைந்து ரன்கள் சேர்க்க, மீண்டும் வாண்டர்சே பவுலிங்கில் சுப்மன் கில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் சிவம் துபேவும் டக் அவுட்டாகி வெளியேற, 20வது ஓவரில் எதிர்பாராத வகையில் விராட் கோலியும் 14 ரன்களில் வெளியேறினார். கண்மூடி திறப்பதற்குள் இந்திய அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களிலும், கேஎல் ராகுல் டக் அவுட்டாகியும் நடையை கட்டினர்.
இதனால் இந்திய அணி 147 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் சிக்கியது. இதன்பின் அக்சர் படேல் - வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து கவனமாக ரன்கள் சேர்க்க தொடங்கினர். விக்கெட் கொடுக்க கூடாது என்பதில் இருவரும் கவனமாக இருந்த நிலையில், இந்திய அணியின் ஸ்கோர் 33 ஓவர்கள் முடிவில் 185 ரன்களாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அக்சர் படேல் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அசலங்கா பவுலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்த 2 ஓவர்களில் வாஷிங்டன் சுந்தரும் 15 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணியின் பாடு திண்டாட்டமானது. இந்திய அணியின் வெற்றிக்கு 84 பந்துகளில் 50 ரன்களாக தேவையாக இருந்தது. களத்தில் குல்தீப் யாதவ் - சிராஜ் இருவரும் போராட, இலங்கை அணி வீரர்கள் கொண்டாட்ட மனநிலைக்கே சென்றனர். பின்னர் சிராஜ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் 3 ரன்களில் ரன் அவுட்டாகினார். இதனால் இந்திய அணி 42.1 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் 11 ஆண்டுகளுக்கு பின் முதல் பேட்டிங் செய்து இந்திய அணியை இலங்கை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.