கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கொழும்பு மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதல் ஒருநாள் போட்டி டை-யில் முடிவடைந்த நிலையில், 2வது ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன. இந்த நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதன்பின் இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா பேசுகையில், நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். இந்த பிட்ச் முதல் போட்டியில் இருந்ததை போலவே உள்ளது. இதனால் கேப்டனாக என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவேன். இந்த போட்டியில் இலங்கை அணிக்காக ஹசரங்கா மற்றும் ஷுராஸ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கமிண்டு மெண்டிஸ் மற்றும் வண்டர்சே களமிறங்கவுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், சேஸிங்கின் போது என்ன எதிர்பாக்கலாம் என்பதை அறிவோம். நிச்சயம் ஸ்பின்னாகும் என்பதால், தயாராக இருக்கிறோம். எப்போதும் ஒரே மனநிலையில், ஒரே பாணியில் அனைத்து போட்டிகளிலும் விளையாடிவிட முடியாது. சில நேரங்களில் தட்பவெட்ப சூழல்களுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும்.
அனைவரும் இணைந்து சுதந்திரமாக விளையாட வேண்டும் என்பதே இலக்கு. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை. கடைசி போட்டியில் வெற்றிபெற முடியவில்லை என்பதை நினைத்து கவலைப்பட தேவையில்லை. இரு அணிகளும் சிறப்பாக விளையாடினோம். எந்த அணியும் வெற்றிபெறாததே சரியான முடிவாக பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்
இலங்கை பிளேயிங் லெவன்: நிசாங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா, அசலங்கா, கமிண்டு மெண்டிஸ், ஜனித் லியானகே, வெல்லாலகே, தனஞ்செயா, அஷிதா ஃபெர்னாண்டோ, வாண்டர்சே