துபாய்: ஆசிய கோப்பை இறுதி சுற்றுக்கு இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் தற்போது சமீபிரதாய ஆட்டமாக இலங்கை அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து இந்திய அணி களமிறங்கியது. பாகிஸ்தானுக்கு இறுதிப் போட்டிக்கு முன்பு இந்த ஆட்டம் நடைபெறுவதால், இது இந்திய வீரர்களுக்கு ஒரு நல்ல பயிற்சி களமாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தொடக்க வீரராக களம் இறங்கிய கில், ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த நிலையில் தீக்ஷனா பந்துவீச்சில் அவரிடமே நான்கு ரன்களில் கேட்ச் ஆனார். ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் அபிஷேக் சர்மா தன்னுடைய வழக்கமான அதிரடியை காட்டினார். தொடர்ந்து பவுண்டரிகளை விரட்டிய அவர் இந்திய அணியில் ஸ்கோர் உயர முக்கிய காரணமாக இருந்தார்.
இதன் மூலம் பவர்பிளே முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. மறுமுனையில் சூரியகுமார் யாதவ் கொஞ்சம் தடுமாறினார். அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மா 22 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் தன்னுடைய ஹாட்ரிக் அரை சதத்தை அவர் பூர்த்தி செய்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா ஸ்ரேயாஸ் ஐயர் ராகுல் சூரியகுமார் ஆகியோருக்கு பிறகு இத்தகைய சாதனையை செய்த இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த தருணத்தில் சூரியகுமார் யாதவ் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஹசரங்கா பந்துவீச்சில் lbw ஆனார்.
இந்த ஆட்டத்தில் சூரியகுமார் 12 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபிஷேக் சர்மா 31 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதில் எட்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் அடங்கும். ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் இன்று பட்டையை கிளப்பினார். தமக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற கோபத்தை இன்று அவர் காட்டினார்.
மூன்று சிக்சர் ஒரு பவுண்டரி என 23 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இந்த கட்டத்தில் ஹர்திக் பாண்டியா இரண்டு ரன்களில் வெளியேற மறுமுனையில் திலக் வர்மாவும் இன்று அபாரமாக விளையாடினார். திலக் வர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் தொடர்பாக விமர்சனம் இருந்த நிலையில், இன்று அவர் பவுண்டரி சிக்ஸர் என அடித்து 34 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார்.அதேபோன்று அக்சர் பட்டேல் இறுதியில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 15 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருக்கிறது.