துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான கடைசி சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 12 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றார். சூரியகுமார் யாதவ், கடைசியாக விளையாடிய 18 இன்னிங்ஸில் வெறும் இரண்டு முறை தான் அரைசதம் அடித்திருந்தார்.
அதில் பத்து முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார். கேப்டன் பணியில் சூர்யகுமார் அபாரமாக இருந்தாலும் பேட்டிங்கில் அவர் தடுமாறி வருவது அணிக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா, கில் ஆகியோர் அபாரமாக விளையாடி வருவதால் சூரியகுமார் அவர்களின் மைனஸ் அணிக்கு தாக்கத்தை எதுவும் ஏற்படுத்தவில்லை.ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்து விட்டால் சூரியகுமார் யாதவ், பெரிய இன்னிங்ஸ் ஆடி அணியை காப்பாற்ற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படுவார்.
இந்த நிலையில் நடப்பு 2025 ஆம் ஆண்டில் சூரியகுமார் யாதவ் 10 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாகவே 99 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.அவருடைய சராசரி 12 என்ற அளவில் இருக்கிறது. ஸ்ட்ரைக் ரேட் 110 என்ற அளவில் உள்ளது. இது சூரியகுமார் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பைனலுக்கு முன்பாவது சூரியகுமார் யாதவ், ஃபார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இலங்கை போன்ற பலம் குன்றிய அணிக்கு எதிராக கூட அவர் தடுமாறி வருவதாக ரசிகர்கள் சாடியுள்ளனர்.
சூரிய குமார் யாதவின் இந்த மாதிரி பேட்டிங்கை வைத்துக்கொண்டு இந்திய அணி எப்படி உலகக் கோப்பை தொடரை வெல்லும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சூரியகுமார் யாதவ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் குறைந்தபட்சம் 30 ரன்களையாவது அடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.