பல்லேகேலே: விராட் கோலி தனது ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்வில் செய்த சாதனையை சூர்யகுமார் யாதவ் இப்போதே சமன் செய்து அதிர வைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டார்.
பேட்ஸ்மேன் ஆகவும் அவர் இந்திய அணியை தூக்கி நிறுத்தினார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது 26 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்தது அவர்தான். 22 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் தனது சர்வதேச டி20 வாழ்வில் 20 ஆவது அரை சதத்தை கடந்தார். அவர் 69 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி 213 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து ஆடிய இலங்கை அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார். இது அவரது 16 வது ஆட்டநாயகன் விருது ஆகும். இதன் மூலம் ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற சாதனையை விராட் கோலி உடன் பகிர்ந்து கொண்டார்.
விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி 16 முறை ஆட்டநாயகன் விருதை வென்று இருக்கிறார். தற்போது சூர்யகுமார் யாதவ் வெறும் 69 போட்டிகளில் மட்டும் விளையாடி 16 ஆட்டநாயகன் விருதுகளை வென்று இருக்கிறார். இதன் மூலம், விராட் கோலி தனது ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்வில் செய்த சாதனையை சூர்யகுமார் எளிதாக சமன் செய்து இருக்கிறார்.
இந்த போட்டியில் இலங்கை அணி வீரர் பதும் நிசங்கா 48 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் சூர்யகுமார் யாதவை விட அதிக ரன்கள் எடுத்திருந்த போதும் இலங்கை அணி தோல்வி அடைந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்படவில்லை.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகள் வென்ற வீரர்கள் பட்டியல் -
16 - சூர்யகுமார் யாதவ் (69 போட்டிகள்) - இந்தியா
16 - விராட் கோலி (125) - இந்தியா
15 - சிக்கந்தர் ராசா (91) - ஜிம்பாப்வே
14 - முகமது நபி (129) - ஆப்கானிஸ்தான்
14 - ரோஹித் சர்மா (159) - இந்தியா
14 - விரந்தீப் சிங் (78) - மலேசியா