மும்பை : இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட போகிறார் என்று செய்திகள் வெளியான நிலையில், கௌதம் கம்பீர் சூரிய குமார் யாதவுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஒற்றை காலில் நிற்கின்றார்.
இதைப் போன்று சூரிய குமாரின் நெருங்கிய நண்பரான ரோகித் சர்மாவும் சூர்யாவுக்கு இந்த வாய்ப்பை தர வேண்டும் என பிசிசிஐயிடம் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சூரியகுமார் யாதவும் அதிரடி வீரராக இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு பல சமயங்களில் காரணமாக இருந்திருக்கிறார்.

ஆனால் அவர் ரோகித் சர்மா போல் டெக்னிக்கான யுக்தியை பயன்படுத்தி அணியை வெற்றி பெற செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சூரியகுமார் யாதவும் இந்திய அணிக்கு ஏற்கனவே கேப்டனாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் அவருடைய கேப்டன்சி ரெக்கார்டு என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
ஹர்திக் கேப்டனாக இருந்தபோது சூரியகுமார் யாதவ் அவருக்கு துணை கேப்டனாக செயல்பட்டிருந்தார். இந்த நிலையில் உலககோப்பை தொடருக்கு பிறகு இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் தான் கேப்டனாக செயல்பட்டார். இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன் பிறகு தென்னாப்பிரிக்கா சென்ற சூரியகுமார் யாதவ் அங்கு 2 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார்.
இதில் இந்திய அணி ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ஒட்டுமொத்தமாக சூரியகுமார் யாதவும் இதுவரை 7 போட்டிகளில் இந்தியா அணிக்கு டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். இதில் 5 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கின்றது.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் சூரியகுமார் யாதவ் கேப்டன்சி கவனிக்கும் வகையில் இருந்தது. இதேபோன்று கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியில் இருந்தபோது சூரியகுமார் யாதவ் அங்குதான் விளையாடினார். இதனால் ஏற்பட்ட நட்பும் அவர் கேப்டன் பதவிக்கு வர ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.