பல்லேகேலே: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தார் இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து இலங்கை அணி சேஸிங் செய்த போது கடைசி இரண்டு ஓவர்களில் ஒன்பது ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இருந்தது. எப்படியும் இலங்கை அணி வெற்றி பெற்று விடும் என்ற சூழ்நிலை இருந்தது. அப்போது வேகப் பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜிக்கு தலா ஒரு ஓவர் மீதம் இருந்தன,

அவர்கள் இருவருமே கடைசி இரண்டு ஓவர்களை வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிங்கு சிங் 19 ஆவது ஓவரை வீசினார். இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் ரிங்கு சிங் அதிக ஓவர்கள் வீசியதில்லை. மேலும், இந்த தொடரிலும் இதற்கு முன்னர் பந்து வீசவில்லை. இந்த நிலையில், சூர்யகுமார் யாதவின் இந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.
ஆனால், ரிங்கு சிங் அந்த ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினார். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது இலங்கை. அந்த ஓவரை முகமது சிராஜ் வீசுவார் என அனைவரும் எதிர்பார்த்த போது மீண்டும் அதிர்ச்சி அளித்தார் சூர்யகுமார் யாதவ்.
சூர்யகுமார் யாதவ் தானே பந்து வீச வந்தார். அவர் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்கள் எடுத்ததுடன், ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதை அடுத்து இலங்கை அணி சரியாக 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து போட்டியை டை மட்டுமே செய்தது.
இந்த அடுத்து போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் இந்தியா அபாரமாக செயல்பட்டது. சூப்பர் ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர் இரண்டு ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இதை அடுத்து சூப்பர் ஓவரில் இந்தியா முதல் பந்திலேயே ஃபோர் அடித்து வெற்றி பெற்றது.
பொதுவாக தோனி கடைசி ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களை பந்து வீச வைத்து ஆச்சரியம் அளிப்பார். எப்போதும் இதுபோன்ற இக்கட்டான கடைசி ஓவர்களில் வேகப் பந்துவீச்சாளர்களையே கேப்டன்கள் பயன்படுத்துவார்கள். தோனி பலமுறை அந்த வழக்கத்தை மாற்றி இருக்கிறார்.
ஆனால், தோனி கூட இதுவரை பந்து வீசாத பகுதி நேர பந்து வீச்சாளரை கடைசி ஓவரை வீச வைத்ததில்லை. ஆனால், சூர்யகுமார் யாதவ் கடைசி இரண்டு ஓவர்களையும் இதுவரை இந்த தொடரிலேயே பந்து வீசாத ரிங்கு சிங் மற்றும் தன்னை வைத்தே தோற்க வேண்டிய போட்டியை வெற்றியாக மாற்றி இருக்கிறார். இதை அடுத்து சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.