மும்பை : இந்திய டி20 அணியின் சிறந்த கேப்டனாக சூரியகுமார் யாதவ் விளங்குவார் என்று இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் கணித்திருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா கேப்டனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூரியகுமார் யாதவுக்கு இந்த லக் அடித்திருக்கிறது. இந்த தொடரில் மட்டும் அவர் சிறப்பாக செயல்பட்டால், அடுத்த டி20 உலக கோப்பையிலும் சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் சூரியகுமார் நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ஸ்ரீதர், சூர்யாவை எனக்கு இளம் வயதில் இருந்து தெரியும். சூரியகுமார் யாதவ், ஒரு இளம் வீரராக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்து பயிற்சி செய்வார். இளம் வீரர் என்பதால் எப்போதுமே ஆக்ரோஷமாக சூரிய குமார் இருப்பார்.
தற்போது நான் அவரை பார்க்கும் போது முதிர்ச்சி அடைந்த வீரராக இருக்கின்றார். பேட்டிங் செய்யும்போது யோசித்து பல ஷாட்டுகளை விளையாடுகிறார். தமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பை அவர் உணர்ந்து விளையாடுகிறார். சூழலுக்கு ஏற்ப செயல்படும் வீரராக மாறிவிட்டார். ஐபிஎல் தொடரில் இதற்கு முன்போ இல்லை இந்திய அணிக்கோ சூரியகுமார் யாதவ் பெரிய அளவில் வழிநடத்தியது கிடையாது.
ஆனால் இந்திய அணிக்காக ஒரு எட்டு போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார். அப்போது நான் கிரிக்கெட் வர்ணனையில் இருந்தேன். அதில் சூரிய குமார் யாதவ் ஒரு கேப்டனாக சிறந்த ஒரு பணியை செய்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் சூரியகுமார் யாதவும் கேப்டனாக நல்ல பணியை மேற்கொண்டார்.
அணியை தலைமை தாங்குவது மட்டும் கேப்டனின் பொறுப்பு கிடையாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கேப்டன் என்பவர் தங்கள் அணியில் உள்ள வீரர்களை நல்ல மனநிலையில் வைத்திருக்க வேண்டும். களத்திற்கு வெளியேவும், வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.அவர்களுடன் சரியான முறையில் பேசி அனைவரையும் ஒருங்கிணைந்து விளையாட வைக்க வேண்டும்.
இந்திய அணியில் உள்ள வீரர்களை மட்டுமல்லாமல் அணிக்கு தேர்வு செய்யப்படாத வீரர்களையும் கண்காணித்து அவர்களுடன் பேசி ஊக்கம் கொடுக்க வேண்டும். இதைப் போன்று அணியில் உள்ள ஒவ்வொரு வீரரையும் சரியான முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே ஒரு கேப்டனாக இத்தனை விஷயத்தையும் சூரியகுமார் யாதவ் செய்ய வேண்டும்.
முதலில் இது அவருக்கு கடும் சவால்களை அளிக்கலாம். ஆனால் சூரியகுமார் யாதவ் இந்தப் பணியை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஒரு வெற்றிகரமான கேப்டனாக கூடிய அனைத்து தகுதியிலும் சூரிய குமாருக்கு இருக்கின்றது.
தற்போது முழு நேர கேப்டன் என்பதால் சூரியகுமார் யாதவுக்கு அழுத்தமும் நெருக்கடியும் ஏற்படலாம். இந்த சூழலில் தான் அவர் கம்பீரின் தயவு நிச்சயம் வேண்டும். கம்பீருடன் இணைந்து செயலாற்ற வேண்டும். கே கே ஆர் அணிக்கு விளையாடும் போது கம்பீரை சூரியகுமார் யாதவுக்கு நன்கு தெரியும் என்பதால் இருவரும் பழகுவதில் எந்த சிக்கலும் இருக்காது என ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.