பல்லேகேலே: 2024 டி20 உலகக் கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
சூர்யகுமார் யாதவ் தான் 2026 டி20 உலகக் கோப்பை வரை இந்திய டி20 அணியின் கேப்டனாக இருப்பார் எனவும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஹர்திக் பாண்டியாவை விட சூர்யகுமார் யாதவ் தான் சரியான கேப்டன் என முடிவு செய்ததாக கூறப்பட்டது.

ஆனால், இது குறித்து பேசிய முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட்ஸ் ஸ்டைரிஸ், சூர்யகுமார் யாதவ் தற்காலிக கேப்டன் தான். அவர் இயல்பான கேப்டனுக்கான தேர்வு இல்லை. வேறு யாரும் இல்லாததால் அவரை கம்பீர் கேப்டனாக தேர்வு செய்துள்ளார். தற்போது துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் சுப்மன் கில் விரைவில் கேப்டன்சி குறித்து கற்றுக்கொண்டு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் எனக் கூறியிருந்தார்.
இந்த கருத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியது. சூர்யகுமார் யாதவ் சரியான கேப்டன் இல்லை என அவர் கூறியதை பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் தன் மீதான விமர்சனத்திற்கு செயலால் பதிலடி கொடுத்து இருக்கிறார். அவர் கேப்டன் ஆன பின் இலங்கை டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வெற்றி பெற வைத்து இருக்கிறார்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளை இப்போது கைப்பற்றி இருக்கிறது. இதற்கு முன்பும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடரை சூர்யகுமார் கேப்டனாக வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கேப்டனாக மூன்று டி20 தொடர்களில் பங்கேற்று, மூன்றையும் வென்று கொடுத்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதன் மூலம் தனது செயலால் ஸ்காட் ஸ்டைரிஸ்க்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.