பல்லேகேலே: இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2 - 0 என ஏற்கனவே கைப்பற்றி விட்டது. மூன்றாவது போட்டி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது. பொதுவாக இது போன்ற சூழ்நிலையில், வாய்ப்பு அளிக்கப்படாத வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படும். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அந்த வழக்கத்தை தொடரக் கூடாது பிசிசிஐ-இடம் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இனி இந்திய அணி தொடரைக் கைப்பற்றினாலும் ஒரு தொடரின் அனைத்து போட்டிகளையும் வென்று ஆதிக்கம் செலுத்துவதில் தான் கவனம் செலுத்த வேண்டும் என அவர் உறுதியாக இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

பேட்ஸ்மேன்கள், முக்கிய ஆல் - ரவுண்டர்கள் ஆகியோரை மாற்றக் கூடாது எனவும், அதே சமயம் வேகப் பந்துவீச்சாளர்களை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம் என்பதே அவரது திட்டமாக உள்ளது. அதே போல பிட்ச் மற்றும் போட்டி சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூடுதல் சுழற் பந்துவீச்சாளர்கள் அல்லது கூடுதல் வேகப் பந்துவீச்சாளர்களை அணியில் மாற்றிக் கொள்ளலாம். மற்றபடி, எந்த மாற்றமும் செய்யக் கூடாது என கம்பீர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
மறுபுறம் பிசிசிஐ, இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டி அனுபவம் தேவை என்பதை சுட்டிக் காட்டி ஒன்று, இரண்டு மாற்றங்களையாவது இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் செய்ய வேண்டும் என கூறி உள்ளது. இந்த இரண்டில் எது நடக்கப் போகிறது? என்பது 3வது டி20 போட்டியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்படும் போது தெரிந்து விடும்.
இரண்டாவது போட்டியில் கழுத்து வலி காரணமாக நீக்கப்பட்ட துணை கேப்டன் சுப்மன் கில் மூன்றாவது டி20 போட்டியின் போது அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக துவக்க வீரராக இறங்கிய சஞ்சு சாம்சன் அவருக்கு இடம் அளிக்க வேண்டி நீக்கப்படுவார். சஞ்சு சாம்சன் இரண்டாவது போட்டியில் சுப்மன் கில் ஆடாத காரணத்தால் மட்டுமே அணியில் வாய்ப்பு பெற்றார். எனவே, அவரை மாற்று வீரர் என்ற இடத்தில் தான் கவுதம் கம்பீர் வைத்துள்ளார்.