மதுரை: இந்திய அணியில் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கான தேவை இருப்பதாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கருதுகின்றனர். இதன் காரணமாக அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மத் உள்ளிட்டோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. விரைவில் அர்ஷ்தீப் சிங்கை டெஸ்ட் அணியிலும் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதுவொரு பக்கம் உள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட தமிழக வீரர் நடராஜனை இந்திய அணி நிர்வாகம் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் உள்ளது. ஆஸ்திரேலியா மண்ணில் நடராஜன் சிறப்பாக செயல்பட்ட போது, பலரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் காயம் காரணமாக இந்திய அணியில் தொடர முடியாமல் போனது.

தற்போது காயத்தில் இருந்து குணமடைந்த போதும் நடராஜனை இந்திய அணி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிரிக்கெட்டில் எந்த அரசியல் நடக்கவில்லை. இந்திய அணியில் எனக்கு நன்றாக வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. ஆனால் காயம் காரனமாக பல்வேறு போட்டிகளிலும் விளையாட முடியவில்லை.
எந்த மாநில கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் கிரிக்கெட் வாரியம் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை. இந்திய வீரர்களின் ஆதரவும், பிசிசிஐ ஆதரவும் இருந்ததால் மட்டுமே, என்னால் இந்திய அணிக்காக விளையாட முடிந்தது. தற்போதைய சூழலில் ஐபிஎல் தொடருக்கு பின் தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் மூலமாக கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். தற்போது கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளுக்கு பெற்றோரே நல்ல ஆதரவாக இருக்கின்றனர். எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் உடல் தான் மூலம்தனம். அதனால் உடற்பயிற்சி செய்து உடலை கவனித்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் விளையாடாத நாட்களிலும் தொடர்ந்து உடல்பயிற்சி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் புறக்கணிக்கப்பட்ட போது, பிசிசிஐ நிர்வாகத்தை முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக சாடினர். அதேபோல் வருண் சக்கரவர்த்தி நேரடியாக நல்ல பிஆர் குழுவை வைக்க வேண்டும் என்று கருத்து கூறியிருந்தார். ஆனால் நடராஜன், பிசிசிஐ நிர்வாகத்தை விமர்சிக்காமல் அமைதி காத்துள்ளது குறிப்பிடத்தக்கது.