சென்னை: இந்திய மண்ணில் உருவாகும் வேகப்பந்துவீச்சாளர்கள் முழுமையாக 145 கிமீ வேகத்தில் வீசுவதே அபூர்வமான விஷயமாக பார்க்கப்பட்டு வரும் சூழலில், ஐபிஎல் தொடரில் 3 ஆண்டுகளுக்கு முன் 155 கிமீ வேகத்தில் வீசி பலரையும் திரும்பி பார்க்க வைத்தவர் உம்ரான் மாலிக். காஷ்மீரைச் சேர்ந்த இளம் பவுலரான உம்ரான் மாலிக், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ரவுண்ட் வருவார் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணியில் மட்டுமல்லாமல் ஐபிஎல் அணியில் கூட உம்ரான் மாலிக்கால் தனது இடத்தை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. கடந்த உலகக்கோப்பை தொடருக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் பயணித்த இந்திய அணியில் இடம்பிடித்த உம்ரான் மாலிக், இம்முறை ஜிம்பாப்வே டி20 தொடருக்கான அணியில் கூட இடம்பிடிக்க தவறியுள்ளார்.

மார்க் வுட், ஷமார் ஜோசப் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசும் வீரர்களை பார்க்கும் போது உம்ரான் மாலிக் ஏன் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் உம்ரான் மாலிக் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன் என்ற கேள்விக்கு முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே விளக்கம் கொடுத்துள்ளார்.
உம்ரான் மாலிக் குறித்து பராஸ் ஆம்ரே பேசுகையில், ஒரு கிரிக்கெட் வீரர் தனது திறமையை உயர்த்தி கொண்டே இருக்க வேண்டும். நிச்சயமாக 150 கிமீ வேகத்தில் வீசக் கூடிய பவுலர்கள் அரிதான திறமை கொண்டவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. அவரால் எளிதாக 145 முதல் 148 கிமீ வேகத்தில் பவுலிங் செய்ய முடிந்தது. நான் எப்போதும் வேகத்தை மட்டும் பார்த்து ஒருவரின் அனுமானிக்க மாட்டேன்.
அதேபோல் ஸ்பீடோமீட்டரில் 160 கிமீ வேகத்தை காட்டினால் நான் நம்பவும் போவதில்லை. உம்ரான் மாலிக்கிற்கு அவரின் வேகம் தான் ஆயுதமாக உள்ளது. அந்த வேகத்தில் ஒவ்வொரு பந்தையும் வீசுவது சிறப்பு தான். ஆனால் உம்ரான் மாலிக்கிடம் கட்டுப்பாடு இல்லை. லைன் மற்றும் லெந்தில் கட்டுப்பாடு இல்லையென்றால் நிச்சயம் பிரச்சனை தான்.
அந்த கட்டுப்பாட்டை பவுலிங்கில் கொண்டு வருவதற்காக தான் ரஞ்சி டிராபி தொடரை விளையாட சொல்கிறோம். ரஞ்சி டிராபி தொடரில் மோசமான பவுலிங் செய்தாலும் கூட அவரால் திறமையை வளர்த்து கொள்ள முடியும். அவரின் லைன் மற்றும் லெந்தில் நிச்சயம் கவனம் செலுத்தி கட்டுப்பாட்டுடன் பவுலிங் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.