மும்பை: உலகக்கோப்பை தொடருக்கு பின் காயமடைந்த அறுவை சிகிச்சை செய்த பின், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் மட்டும் தொடர்ச்சியாக என்னுடன் செல்ஃபோனில் பேசி நலம் விசாரிப்பார்கள் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ரிவர்ஸ் ஸ்விங் செய்த போது, பாகிஸ்தான் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக் அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்துவதாக கடுமையாக விமர்சித்தார். இதற்கு ரோகித் சர்மா விளக்கம் அளித்த போதும், இன்சமாம் உல் ஹக் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் முகமது ஷமி பாகிஸ்தான் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு பின் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷமி, தற்போது மீண்டும் பவுலிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். இன்னும் 2 மாதங்களில் முழு ஃபிட்னஸை எட்டும் பட்சத்தில், பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கு தயாராகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பாட்கேஸ்ட் சேனல் ஒன்றுக்கு முகமது ஷமி அளித்துள்ள பேட்டியில், இந்திய அணியின் ஆட்டத்தை பார்த்து பாகிஸ்தானில் ஒரு போது பாராட்ட மாட்டார்கள். சிலர் இந்திய அணிக்கு வேறு பந்துகளை கொடுத்ததாகவும், சிலர் பந்தில் சிப் இருப்பதாகவும் கூறினார்கள். பாகிஸ்தான் பவுலர்கள் ஸ்விங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் செய்தால், அதனை திறமை என்று பாராட்டுவார்கள்.
ஆனால் இந்திய வீரர்கள் ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங் செய்தால், நாம் பந்தை சேதப்படுத்தியதாக கூறுவார்கள். அவர்கள் ஒரு நாளும் மாறப் போவதில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார். தொடர்ந்து காயமடைந்த நாட்கள் குறித்து பேசிய ஷமி, கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மா இருவரும் எனது சிறந்த நண்பர்கள் என்று சொல்வேன்.
அவர்கள் மட்டுமே நான் காயமடைந்த போது என்னை செல்ஃபோனில் அழைத்து உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், சோசியல் மீடியாவில் தொடர்ச்சியாக என்னை பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எந்த பிஆர் குழுவும் எனக்கு கிடையாது. எனக்கு எப்போதும் மக்களின் அன்பே போதும் என்று தெரிவித்துள்ளார்.