கொழும்பு: விராட் கோலிக்கு இலங்கை தொடரில் ஓய்வு அளிக்காததோடு, தற்போது அவரை கட்டாயமாக வலைப் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என கவுதம் கம்பீர் மறைமுகமாக "செக்" வைத்து இருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்க வேண்டி ரோஹித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்சித் ரானா போன்ற வீரர்கள் இலங்கைக்கு சென்றுள்ளனர். நேற்று அவர்கள் இலங்கை சென்று அடைந்த நிலையில், நாளை அவர்களை வலை பயிற்சி செய்யுமாறு பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டி நாளை நடைபெற உள்ளது. அந்தப் போட்டி பல்லேகேலேவில் நடைபெற உள்ளது. இதனிடையே ஒரு நாள் போட்டி தொடரில் மட்டும் பங்கேற்க உள்ள வீரர்கள் கொழும்பில் வலை பயிற்சியில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என இந்திய அணி நிர்வாகத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டி20 அணியுடன் இருக்கும் நிலையில், ஒருநாள் அணி வீரர்கள் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரின் கண்காணிப்பில் வலைப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது. பொதுவாக சிறிய அணிகளுக்கு எதிரான தொடர்களின் போது விராட் கோலி அதிகமாக வலைப் பயிற்சியில் ஈடுபட மாட்டார்.
மேலும், சில தொடர்களில் அவர் ஓய்வும் எடுப்பார். இந்த இலங்கை தொடரில் கூட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பங்கேற்க விரும்பவில்லை என முன்பு கூறப்பட்டது. ஆனால், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முழு உடற் தகுதியோடு இருக்கும் அனைத்து வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்றே ஆக வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்.
வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் என்பதால் அவர்கள் மட்டும் சுழற்சி முறையில் இனி இந்திய அணியில் இடம் பெறுவார்கள் எனவும் அவர் கூறி இருக்கிறார்.அதனால், வேறு வழியின்றி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்த தொடரில் ஆட சம்மதித்தனர்.
தற்போது விராட் கோலி உட்பட அனைவரும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டே ஆக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு வரை விருப்பப்பட்ட வீரர்கள் மட்டும் வலைப் பயிற்சியில் ஈடுபடலாம் என ஒரு சலுகை அளிக்கப்படும். அப்போதெல்லாம் விராட் கோலி ஓய்வில் இருப்பார். அந்த சலுகையும் இப்போது மறுக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சமம் என்பதை சுட்டிக் காட்டவே கவுதம் கம்பீர் இவ்வாறு செய்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம், விராட் கோலிக்கு கவுதம் கம்பீர் மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.