சென்னை: இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி பதவியும், புகழும் வந்த பின் மாறிவிட்டதாக முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா பேசிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அமித் மிஸ்ரா, விராட் கோலியை 14 வயதிருக்கும் போதே நன்றாக தெரியும். நாங்கள் இரவு நேரங்களில் ஒன்றாக இணைந்து சமோசா சாப்பிட்டிருக்கிறோம்.
சில நேரங்களில் விராட் கோலி பீட்சா கேட்பார். அப்படி நெருக்கமான நண்பர்களாக இருந்த நாட்கள் உண்டு. ஒரு கிரிக்கெட் வீரராக விராட் கோலி மீது எப்போதும் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. ஆனால் விராட் கோலி கேப்டனான பின் அவர் நிறையவே மாறிவிட்டார். அவருடன் பழகுபவர்கள் அனைவரும் ஏதோ தேவைக்காக பழகுவதாக நினைக்க தொடங்கிவிட்டார்.

அதேபோல் விராட் கோலி இளம் வீரர்களை கூட சரியாக நடத்துவதில்லை. லக்னோ - ஆர்சிபி போட்டியின் போது லக்னோ வீரர்களை மோசமாக திட்ட தொடங்கிவிட்டார். இளம் வீரர்கள், அனுபவ வீரர்கள் என்று யாருக்கும் மரியாதை அளிப்பதில்லை. கம்பீர் உடன் மோதலில் ஈடுபட்ட போது கூட விராட் கோலி சென்று சமாதானம் செய்யவில்லை. அங்கு விராட் கோலி சென்று சமாதானம் செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக விராட் கோலி ரசிகர்கள், நவீன் உல் ஹக்கிடம் நேரடியாக விராட் கோலி தான் சமாதானம் செய்வோம் என்று அழைத்தார். அவருக்கு ஆதரவு அளிக்குமாறு ரசிகர்களிடம் கேட்டு கொண்டதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் வீரர் ஷஷாங்க் சிங் பேசியுள்ள சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் பேசுகையில், பஞ்சாப் - ஆர்சிபி போட்டி முடிவடைந்த பின் அனைவரும் புறப்படுவதற்கு தயாரானோம். அப்போது இரவு 12.40 மணி இருக்கும். அப்போது விராட் கோலியிடம் பேச தொடங்கினேன். அவருடன் பேசப்பேச நேரம் செல்வதே தெரியவில்லை. கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டே இருந்தோம்.
கிரிக்கெட், டெக்னிக், ஷாட்ஸ், மனரீதியாக தயாராகுதல் என்று ஏராளமான விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அவருடன் உரையாடியது எங்கள் மாநில சத்தீஸ்கர் வீரருடன் பேசியது போன்ற உணர்வை கொடுத்தது. பயிற்சியின் போது எப்படி வீடியோ எடுக்க வேண்டும், அதன்பின் எப்படி ஆராய வேண்டும் என்று கூறினார். அதேபோல் விராட் கோலியின் பேச்சில் கொஞ்சம் கூட நெகட்டிவ் வார்த்தைகளே இல்லை என்று தெரிவித்துள்ளார்.