பாலக்கலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இதே மைதானத்தில் இந்தியா - இலங்கை அணி விளையாடுவதால், ரசிகர்கள் ஆவலுடன் குவிந்தனர்.
இதில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சிவம் துபே, சஞ்சு சாம்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கின்றனர். ஜிம்பாப்வே டி20 தொடரில் மூவரும் விளையாடிய நிலையில், அவர்களுக்கு பதிலாக ரிங்கு சிங், ரிஷப் பண்ட் மற்றும் ரியான் பராக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் ஜிம்பாப்வே டி20 தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். ஒரு போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது, சஞ்சு சாம்சன் மட்டும் நிலைத்து நின்று விளையாடி இந்திய அணியை காப்பாற்றினார். இதன் மூலமாக சஞ்சு சாம்சன் ஃபார்மில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டினர்.
அதேபோல் வாஷிங்டன் சுந்தர் ஜிம்பாப்வே டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்தார். இந்திய அணிக்கு தேவையான ஆஃப் ஸ்பின்னருக்கான இடத்தை வாஷிங்டன் சுந்தர் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அடுத்தடுத்த டி20 தொடர்களில் வாஷிங்டன் சுந்தருக்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் தமிழ்நாடு வீரரான வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டரான ரியான் பராக்கை இந்திய அணி நிர்வாகம் பிளேயிங் லெவனில் சேர்த்துள்ளது. இதன் மூலமாக இந்திய அணியின் பேட்டிங் வலிமை பெற்றுள்ளது என்றாலும், அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகிய 2 ஸ்பின்னர்கள் மட்டுமே உள்ளனர்.
ஏற்கனவே நீண்ட காலமாக பெஞ்சில் இருந்து வரும் வாஷிங்டன் சுந்தர், தற்போது மீண்டும் பெஞ்ச் செய்யப்பட்டுள்ளார். ஜடேஜாவுக்கு மாற்றாக உருவாகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி நிர்வாகம் வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்தாமல் சோதித்து வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.