டெல்லி: முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் வான் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததை கிண்டல் செய்து இருந்தார். அதற்கு முன்னாள் இந்திய டெஸ்ட் அணி வீரர் வாசிம் ஜாஃபர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் டி20 தொடரில் இந்திய அணி 3 - 0 என வெற்றி பெற்ற போதும், ஒரு நாள் தொடரில் 2 - 0 என தோல்வி அடைந்து இருந்தது.

ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்று இருந்தும் இந்திய அணி குறைந்த பலம் கொண்ட இலங்கை அணியிடம் ஒரு நாள் தொடரில் தோல்வி அடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வான் வாசிம் ஜாஃபரிடம் இந்திய அணியின் தோல்வி குறித்து கிண்டல் செய்து இருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "ஹாய் வாசிம்.. சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் முடிவு என்ன? நான் வெளிநாட்டுக்கு சென்று இருந்ததால் அந்த தொடரை பார்க்கவில்லை. எல்லாம் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்," என இந்திய அணியை சீண்டும் வகையில் கூறி இருந்தார்.
அதற்கு பதில் அளித்த வாசிம் ஜாஃபர், "இதை உங்களுக்கு ஆஷஸ் தொடரின் வழியிலேயே விளக்குகிறேன். கடந்த 12 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி எத்தனை போட்டிகளில் வென்றதோ, அத்தனை போட்டிகளில் இந்திய அணியும் வென்றது." என கூறி இருந்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணியை மட்டம் தட்டி பதிலடி கொடுத்திருந்தார் வாசிம் ஜாஃபர். கடந்த 12 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது. கடைசியாக 2011-12 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது.
அப்போது ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றி இருந்தது. அதன் பின் 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அதைத் தான் வாசிம் ஜாஃபர் கிண்டல் செய்துள்ளார். இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் வெற்றி பெற்றதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.