பாலக்கலே: இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது.
இதன்பின் இந்திய அணி பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டது. இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 8 ஓவர்களில் 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி 6.3 ஓவர்களில் சேஸ் செய்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் 30 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 12 பந்துகளில் 26 ரன்களும், ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 22 ரன்களும் விளாசினர்.

இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியை சிறப்பாக தொடங்கியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், இந்த டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பாக பேசியது தான். என்ன மாதிரியான ஆட்டத்தை டி20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது தான் எங்களின் பேசுபொருளாக இருந்தது.
இதே டெம்ப்ளேட்டில் தான் அடுத்தடுத்த போட்டிகளிலும் விளையாட விரும்புகிறோம். வானிலையை கருத்தில் கொண்டு பவுலிங்கின் போது 160 ரன்களுக்கு கீழ் இலங்கை அணியை கட்டுப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று கருதினோம். அதேபோல் மழையும் எங்களுக்கு உதவியாக அமைந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள்.
வரும் போட்டிகளில் மீதமுள்ள வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதை இனி தான் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். இந்த வெற்றிக்காக மகிழ்ச்சியடைகிறோம். ஏனென்றால் ஆட்டம் கைகளை விட்டு செல்லும் போது மீண்டு எழுந்து வென்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 3வது டி20 போட்டி நாளை மறுநாள் நடக்கவுள்ளது.
ஏற்கனவே இந்திய அணி டி20 தொடரை வென்றுள்ளதால், சிராஜ், அக்சர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், கலீல் அஹ்மத் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.