மும்பை: இலங்கைக்கு சுற்றுப்பயனம் மேற்கொள்ளும் இந்திய டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு இளம் வீரர் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.
இந்த ஆச்சரியம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் சேர்க்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை விடவும் கூடுதல் அதிர்ச்சி என்னவென்றால் ஜிம்பாப்வே டி20 தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக் இந்திய டி20 அணியில் மட்டுமல்லாமல் ஒருநாள் அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான காரணம் என்ன என்று பலரும் குழம்பி வருகின்றனர். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட பவுலிங் செய்யாமல் இருந்தது பின்னடைவாக மாறியது. இதன் காரணமாகவே சிவம் துபே போன்ற வீரர்களை டி20 அணியில் சேர்த்து இந்திய அணி நிர்வாகம் உருவாக்க தொடங்கியது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அதே சிக்கலை சரி செய்து கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா முடிவு செய்துள்ளார்.
அதன் காரணமாகவே ரியான் பராக் மீது நம்பிக்கை வைத்து இரு அணிகளிலும் இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரிலேயே பேட்டிங்கில் 573 ரன்களை விளாசி தனது திறமையை நிரூபித்துவிட்டார். நம்பர் 4 வரிசையில் களமிறங்குவதால், அந்த இடத்திற்கான போட்டியும் குறைவாகவே இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே அந்த இடத்தில் விளையாடி வருகிறார்.
அதேபோல் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரியான் பராக் தொடர்ச்சியாக பவுலிங் செய்து வருகிறார். அதிலும் அஸ்வினுக்கு வயதாகி வரும் சூழலில், வாஷிங்டன் சுந்தர் மட்டுமே ஆஃப் ஸ்பின்னராக இருக்கிறார். இதனால் அணியில் மற்றொரு ஆஃப் ஸ்பின் வீசும் வீரராக ரியான் பராக் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 49 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளையும், 117 டி20 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளையும் ரியான் பராக் வீழ்த்தி இருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கவுதம் கம்பீர் இருவருக்குமே ஆல்ரவுண்டர்களை அதிகம் பிடிக்கும் என்பதால், ஐசிசி தொடர்களை மனதில் வைத்து ரியான் பராக்கின் ஆட்டம் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.