மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதோடு, ஹர்திக் பாண்டியாவின் துணைக் கேப்டன் பதவியும் அளிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டவர் ஹர்திக் பாண்டியா. அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மா ஓய்வில் இருந்த போது, இந்திய அணியை ஏராளமான போட்டிகளில் வழிநடத்தி இருக்கிறார். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருடன் ரோஹித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

இதனால் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய பயிற்சியாளரான கவுதம் கம்பீர், அனைத்து டி20 போட்டிகளிலும் விளையாடக் கூடிய வீரராக இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தார். இதனால் சூர்யகுமார் யாதவின் பெயரும் டி20 கேப்டனுக்கான ஆலோசனையில் அடிப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அல்லாமல் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.
இதனிடையே அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் ஹர்திக் பாண்டியாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது ஹர்திக் பாண்டியா தரப்பில் இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பு இல்லையென்றால், தனக்கு துணைக் கேப்டன் பதவியும் தேவையில்லை என்று கூறியதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் புதிய துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா ஓய்வு கோரியதால், ஒருநாள் தொடரிலும் சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்திய அணியில் எதிர்காலத்திற்கான கேப்டனாக சுப்மன் கில்லை பிசிசிஐ பார்ப்பது புரிந்து கொள்ளப்படுகிறது. இதனால் பலரும் சுப்மன் கில்லுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.