சென்னை: இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அனுபவ வீரர்களை கொண்ட இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது. கடந்த ஓராண்டாக இந்திய அணி தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் வெற்றி பெற்று வந்தது. 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் கூட இறுதிப் போட்டிக்கு முன் பத்து போட்டிகளில் பத்து அணிகளுக்கு எதிராக தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்து இருந்தது.
இந்த நிலையில், இலங்கை தொடரில் ஏற்பட்ட தோல்வியை ஈடுகட்டும் வகையில் அடுத்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். ஆனால், இந்திய அணி விளையாடும் அடுத்த போட்டி சுமார் 40 நாட்கள் கழித்தே தொடங்க உள்ளது.

இத்துடன் இந்திய அணி செப்டம்பர் 19 அன்று வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் பங்கேற்க உள்ளது. இடையே இந்திய அணி எந்த கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை. கடந்த ஓராண்டாக இந்திய அணி ஓய்வின்றி விளையாடி வந்த நிலையில், அனைத்து வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் ஒரு மாத காலம் எந்த போட்டிகளிலும் விளையாடப் போவதில்லை. கடந்த நான்கு மாதங்களாக இந்திய வீரர்கள் மிகத் தீவிரமான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றதே இதற்கு காரணம்.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்கள், ஐபிஎல் முடிந்த அடுத்த சில தினங்களில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றனர். அந்த தொடர் முடிந்த சில நாட்களில் ஜிம்பாப்வே டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றனர். சுழற்சி முறையில் வீரர்கள் பங்கேற்றாலும், முழு அளவிலான ஓய்வு என்பது இல்லாமல் இருந்தது. அதை கருத்தில் கொண்டு பிசிசிஐ ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் சுமார் 40 நாட்கள் ஓய்வு அளித்துள்ளது.
செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ள வங்கதேசஅணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின் அக்டோபர் 6 முதல் வங்கதேச அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது இந்திய அணி.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் அந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இளம் இந்திய வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்து வந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமான செய்தியாகவே அமைந்து இருக்கிறது.