மும்பை : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியில் நான்கு தொடக்க வீரர்கள் டாப் வரிசையில் முதல் நான்கு இடத்தில் களமிறங்கினர்.
இந்த நான்கு வீரர்களுமே சிறப்பாக செயல்பட்டு இருப்பதால், தொடக்க வீரராக யார் வரப் போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜிம்பாப்வே தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா சதம் அடித்திருந்தார்.

இதேபோன்று சுப்மன் கில்லும் அரை சதம் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்திருந்தார். ஜெய்ஸ்வாலும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து இருக்கிறார். இதேபோன்று ருதுராஜ் கெய்க்வாடும், தன்னுடைய பார்மை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். இந்த சூழலில் இது குறித்த கருத்து தெரிவித்துள்ள சுப்மன் கில், தொடக்க வீரர்களுக்கான இடத்திற்கு கடும் போட்டி நிலவுவது நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு நல்ல விஷயம் தான்.
தற்போது அணியில் இருக்கும் அனைவரும் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் வாய்ப்புக்காக ஒவ்வொரு வீரர்களும் எவ்வளவு பசியுடன் காத்திருக்கிறார்கள். யாருமே பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இல்லை. இது ஒவ்வொரு அணிக்குமே நல்ல விஷயம். ஜிம்பாப்வே தொடரில் பலரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று பாராட்டியுள்ளார்.
மேலும் இலங்கை தொடரில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது இனி தேர்வு குழுவினர் கையில்தான் இருக்கிறது என்றும் தங்களிடம் எதுவும் இல்லை என்றும் கில் கூறியுள்ளார். இந்த சூழலில் இலங்கை அணி எதிரான டி20 தொடரில் இதேபோன்ற பேட்டிங் வரிசை கொண்ட அணி தான் களமிறங்கும்.
ஆனால் ஒரு நாள் தொடரில் யார் யார் இடம் பெற போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கில் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார். அவருக்கு ஜோடியாக ரோகித் சர்மா இல்லாத நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் விராட் கோலி இடத்தில் ருதுராஜ் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது.