சென்னை: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றாலும், அந்த இடத்தை நிரப்புவதற்கான ரேசில் ஏராளமான வீரர்கள் முன்னிலையில் உள்ளனர். இதே நிலை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இருப்பதால், தேர்வு குழு, கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோருக்கு தலைவலியை கொடுத்துள்ளது.
ஏனென்றால் டி20 அணியில் இடத்தை பறிகொடுத்த கேஎல் ராகுல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இன்னொரு பக்கம் 10 ஆண்டுகளாக இந்திய அணியில் நிரந்தர இடத்திற்காக போராடி வரும் சஞ்சு சாம்சன், ஒரு வழியாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இன்னொரு பக்கம் விபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ரிஷப் பண்ட், டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடியதோடு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மீண்டும் தனது இடத்தை பிடிக்க தயாராகி நிற்கிறார்.
இதுமட்டுமல்லாமல் இஷான் கிஷன் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோரும் விக்கெட் கீப்பருக்கான ரேசில் இருக்கின்றனர். இந்த நிலையில் இலங்கை ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி தேர்வு இன்று நடக்கவுள்ளது. ஏற்கனவே கேப்டன்சி பஞ்சாயத்து ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், 3 சிறந்த விக்கெட் கீப்பர்களில் யாரை கழற்றிவிடுவது என்று தெரியாமல் தேர்வுக் குழுவினர் திண்டாடி வருகின்றனர்.
இதனிடையே 3 விக்கெட் கீப்பர்களையும் 2 வடிவ போட்டிகளில் பயன்படுத்த தேர்வு குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை டி20 உலகக்கோப்பையில் ஆடிய ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரையும் பயன்படுத்தி கொள்ளவும், ஒருநாள் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் மற்றும் கேஎல் ராகுல் இருவரையும் பயன்படுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் இருவரையும் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருவதால், ஒருநாள் அணியில் ரிஷப் பண்ட் இல்லாமல் இந்திய அணி தேர்வு செய்யப்படுமா என்பதே ரசிகர்களின் குழப்பமாக உள்ளது.