பல்லேகேலே: இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கை டி20 தொடருக்கு முன்பாக அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவரிடம் 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை அணியின் கேப்டனாக இருந்தபோது சக வீரர்களை திட்டியதற்காக கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சூர்யகுமார் யாதவ், இப்போது தான் மாறிவிட்டதாக கூறினார். 10 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது?
2014ஆம் ஆண்டில் மும்பை அணியில் இடம் பெற்று இருந்த சூர்யகுமார் யாதவ் உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதை தொடர்ந்து மூத்த வீரர்கள் யாரும் இல்லாத நிலையில். அவர் 2014-15 ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் மும்பை அணி தனது ரஞ்சி டிராபி வரலாற்றிலேயே மோசமான தோல்விகளை சந்தித்தது.

அவரது கேப்டன்சியில் ஆறு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றிருந்தது. தமிழ்நாடு அணிக்கு எதிராக இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 1951க்கு பின் மும்பை சந்தித்த மிக மோசமான தோல்வி அது. அதனால் அவரது கேப்டன்சி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதே சமயம், அவர் வேறு ஒரு விஷயத்திலும் சிக்கினார்.
அவர் ஆடுகளத்திலும், வீரர்கள் ஓய்வறையிலும் சக வீரர்களை கெட்ட வார்த்தையில் திட்டியதாக புகார் எழுந்தது. சில வீரர்கள் அவர் மீது அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தனர். மேலும், மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியின் போது ஷர்துல் தாக்குருடன் அவர் கடும் வாக்குவாதம் செய்து அவரை திட்டினார். இதை அடுத்து மும்பை அணியின் மேலாளர் சூர்யகுமார் யாதவ் மீது மும்பை மாநில கிரிக்கெட் அமைப்பில் புகார் அளித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.
அதன் முடிவில் சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவர் உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேனாகவும், நல்ல மனிதராகவும் அறியப்படுகிறார். தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். 2026 டி20 உலகக் கோப்பை வரை சூர்யகுமார் யாதவ் தான் இந்திய டி20 அணியின் கேப்டன் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கேப்டனாக நடந்து கொண்ட விதம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
அப்போது பதில் அளித்த சூர்யகுமார் யாதவ், "10 ஆண்டுகளில் எல்லாமே மாறிவிட்டது. நான் முற்றிலும் வேறு ஒரு மனிதனாக மாறிவிட்டேன். நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். 2016 இல் எனக்கு திருமணம் நடந்தது. எனவே, அதன் பின் நாம் நிச்சயம் மாறித்தான் ஆக வேண்டும். இப்போது பல விஷயங்கள் என்னிடம் மாறி உள்ளன. நான் பல்வேறு கேப்டன்களின் கீழ் விளையாடி பல விஷயங்களை கற்றுக் கொண்டு இருக்கிறேன். கடந்த ஆறு வருடமாக ரோஹித் சர்மாவிடம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அந்த படிப்பினைகளுடன் எனது பாணியில் இந்த அணியை கொண்டு செல்வேன்" என்றார்.