மும்பை: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான கிரிக்கெட் தொடர் வரும் 27 முதல் தொடங்குகிறது. ஆசியக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி முதல்முறையாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணி வீரர்கள் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் கீழ் விளையாடவுள்ளனர். இதனால் கவுதம் கம்பீரின் ஸ்டைலை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய அணிக்கான தேர்வு இன்று நடக்கவுள்ளது. இதில் இந்திய அணியின் புதிய டி20 கேப்டன் யார் என்பது குறித்தும் தேர்வு செய்யப்படவுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்தனர். இதன்பின் மூவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை சொந்த மண்ணில் நடக்கவுள்ள 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயார் செய்ய வேண்டிய பொறுப்பு கவுதம் கம்பீருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்திய டி20 அணியின் கேப்டனுக்கான ரேசில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும், மற்ற தேர்வு குழு உறுப்பினர்கள் சூர்யகுமார் யாதவிற்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அதேபோல் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் சூர்யகுமார் யாதவிற்கு ஆதரவாக இருக்கிறார்.
ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவுக்கு ஃபிட்னஸ் பிரச்சனை இருப்பதால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிரந்தர கேப்டன் இருக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கேகேஆர் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் இருந்த போது, துணைக் கேப்டன் பதவியை சூர்யகுமார் யாதவிற்கு அளித்து ஆதரவாக இருந்தார்.
சூர்யகுமார் யாதவ் இளம் வீரராக இருந்த போதே கம்பீருடன் நல்ல நட்பில் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சூர்யகுமார் யாதவ் மும்பையை சேர்ந்தவர் என்பதால், மும்பை லாபியும் அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
அப்போது இந்திய வீரர்களை அவர் வழிநடத்தியது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களால் பாராட்டப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.