மும்பை : இந்திய கிரிக்கெட் அணி எப்போதெல்லாம் தடுமாறுகிறதோ அப்போதெல்லாம் பெங்களூரை சேர்ந்த ஏதாவது ஒரு ராகுல் அணியை காப்பாற்றுவார். இந்திய அணி என்ன சொல்கிறதோ அதை மறுகேள்வியே கேட்காமல் செய்வார்கள். தொடக்க வீரர், இல்லை நடுவரிசை வீரர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என எந்த பொறுப்பு கொடுத்தாலும் பெங்களூரில் இருந்து வரும் ராகுல்கள் கண்டிப்பாக செய்வார்கள்.
அது ராகுல் டிராவிட் ஆக இருந்தாலும் சரி, கே.எல். ராகுல் ஆக இருந்தாலும் சரி! அப்படிப்பட்ட கே எல் ராகுல் ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் ரோகித் சர்மா காயத்தால் சில தொடர்களில் விளையாடாத நிலையில் கே எல் ராகுல் தான் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கம்பீரின் பட்டறைக்கு சென்ற பின் கே எல் ராகுல் தன்னையே மெருகேற்றிக் கொண்டார். 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்க்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் ராகுல் தலைமையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கு வென்றது.
இதேபோன்று தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று ஒரு நாள் போட்டியில் கே எல் ராகுல் தலைமையில் இந்தியா இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்றது. அந்தத் தொடர்களில் கே எல் ராகுல் கேப்டனாக சிறப்பாக செயலாற்றியதாக கிரிக்கெட் வல்லுநர்களும் பாராட்டியுள்ளனர்.
இந்த சூழலில் இந்திய அணியின் துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. இந்த நிலையில் கே எல் ராகுலுக்கு தானே அடுத்த கேப்டன் பொறுப்பு வந்திருக்க வேண்டும். ஏன் கில்லை தேர்வு செய்தீர்கள் என்று ரசிகர்களிடமிருந்து கேள்விகள வருகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். முதல் விஷயமாக பார்க்கப்படுவது கே எல் ராகுலின் வயது தான்.
கே எல் ராகுலுக்கு தற்போது 32 வயதாகிவிட்டது. ஆனால் கில்லுக்கு தற்போது 24 வயது தான் ஆகிறது. ரோகித் சர்மா இன்னும் இரண்டு ஆண்டுகள் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ராகுலுக்கு வயது 34 ஆகிவிடும். அதன் பிறகு ராகுல் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்துவதை விட இளம் வீரராக இருக்கும் கில்லே சரியாக இருப்பார் என்று பிசிசிஐ யோசித்து இருக்கும்.
இன்னொரு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கே எல் ராகுலின் உடல் தகுதி தான். ராகுல் பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பர் என்று பல பொறுப்பில் இருந்தாலும் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு விடுகிறது. இதற்காக கே எல் ராகுல் அறுவை சிகிச்சை எல்லாம் செய்து கொண்டுள்ளார். இதனால் ராகுலுக்கு உடல் தகுதி பிரச்சனை வந்தால் கேப்டன் பொறுப்பை மாற்ற முடியாது என்பதால் கில்லுக்கு இந்த வாய்ப்பு சென்றிருக்கலாம்.
இதேபோன்று கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்த போது வெள்ளை நிற கிரிக்கெட் போட்டிகளுக்கு இரண்டு கேப்டன்களை வைக்க முடியாது என்று கூறினார். தற்போது ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாகவும் சூரியகுமாரி யாதவ் டி20 கேப்டன் ஆகும் இருக்கிறார்கள். ஆனால் ரோகித் சர்மாவும், சூர்யாவும் ஓய்வு பெற்று விட்டால், மீண்டும் கங்குலியன் ஃபார்முலாவுக்கு செல்ல கில் சரியாக இருப்பார் என பிசிசிஐ முடிவு எடுத்து இருக்கலாம்.
இன்னொரு முக்கிய காரணம் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டுக்கு வருமானங்களை அள்ளிக் கொடுக்கும் வீரராக இருக்கிறார். அவர் சென்று விட்டால் அவருக்கு மாற்று வீரர் ஒருவர் தேவை என்பதால் சுப்மன் கில்லை பிசிசிஐயே கேப்டன் பதவி கொடுத்து அவரை அடுத்த ஸ்டாராக உருவெடுக்க, இப்படி பூஸ்ட் அப் செய்திருக்கலாம்.