கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் மூலம் த்ரில் வெற்றியை பெற்றது. இலங்கை அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ரசிகர்கள் பலரும் சிராஜ் பவுலிங் செய்ய வேண்டும், அப்போது தான் ரன்களை கட்டுப்படுத்தி ஆட்டத்தை கடைசி ஓவருக்கு கொண்டு செல்ல முடியும் என்று எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் கேப்டன் சூர்யகுமார் யாதவ் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிங்கு சிங்கிடம் கொடுத்தார். அந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த ரிங்கு சிங், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் ரிங்கு சிங் பவுலிங் செய்வது இதுவே முதல்முறையாகும். தொடர்ந்து கடைசி ஓவரை சூர்யகுமார் யாதவ் வீசும் முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

போட்டி முடிவடைந்த பின் இதுகுறித்து சூர்யகுமார் யாதவிடம் கேட்ட போது, அவர் சரியாக பதிலளிக்கவில்லை. இதன்பின் ஒளிபரப்பாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்திய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா, 19வது ஓவரை நீங்கள் வீசாமல் ரிங்கு சிங் கைகளில் கொடுத்தது ஏன் என்று சரியாக மடக்கினார். இதற்கு சூர்யகுமார் யாதவ் பதிலளிக்கையில், 20வது ஓவரை நான் வீசப் போகிறேன் என்பதை முன்பே முடிவு செய்துவிட்டேன்.
ஆனால் 19வது ஓவரை யார் கையில் கொடுப்பது என்பது தான் சவாலாக இருந்தது. ஏனென்றால் சிராஜ் உள்ளிட்ட சில பவுலர்களுக்கு ஓவர்கள் மீதமிருந்தன. இந்த பிட்சில் பவுலிங் செய்வதற்கு ரிங்கு சிங் தான் சரியாக இருப்பார் என்று நினைத்தேன். ஏனென்றால் வலது கை ஸ்பின்னரால் இந்த பிட்சில் நன்றாக செயல்பட முடிந்தது. அதேபோல், வலைப்பயிற்சியில் ரிங்கு சிங் சில முறை பவுலிங் செய்வதை பார்த்திருக்கிறேன்.
அதுதான் சரியாக முடிவாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இடதுகை பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும் போது வலதுகை ஸ்பின்னர் வீசுவது சரியாக இருக்கும். அவ்வளவு எளிதாக ஸ்பின்னரை இடதுகை பேட்ஸ்மேன்களால் அட்டாக் செய்ய முடியாது. ரிங்கு சிங் சரியாக எழுச்சி பெற்று எனது பணியையும் எளிமையாக்கிவிட்டார். எதிர்காலத்தில் கூடுதல் ஸ்பின் பவுலிங் வாய்ப்புகள் இந்திய அணியில் இருப்பது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
ரிங்கு சிங் வீசிய 2வது பந்தில் குசால் பெரேரா 46 ரன்களில் அவரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனை ஓய்வறையில் இருந்து பார்த்த கவுதம் கம்பீர் நம்ப முடியாமல் சிரிக்க தொடங்கினார். அதேபோல் ரிங்கு சிங்கின் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முயன்று ரமேஷ் மெண்டிஸ்-ம் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது திருப்புமுனையாக மாறியது. இந்த முடிவை எடுத்ததற்காக சூர்யகுமார் யாதவை பலரும் பாராட்டி வருகின்றனர்.